திருத்தந்தையின் வார்த்தைகள் அமைதிக்கு உந்து சக்தி
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
முன்னாள் யுக்கோஸ்லாவியாவைச் சேர்ந்த மாசிடோனியா நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதையொட்டி, அந்நாட்டு கத்தோலிக்கரின் மகிழ்வையும், நன்றியையும் வெளியிட்டுள்ளார், மாசிடோனியாவின் கத்தோலிக்க ஆயர்.
மாசிடோனிய இலத்தீன் வழிபாட்டுமுறை மற்றும், பைசான்டைன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கரின் ஒரே மேய்ப்பராகப் பணியாற்றும், ஆயர் Kiro Stoyanov அவர்கள், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திருத்தூதுப் பயணம், மாசிடோனிய சமுதாயத்திற்குத் தேவைப்படுகின்ற, ஆன்மீகப் புதுப்பித்தலுக்கு உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.
மாசிடோனியாவின் தலைநகரமாகவும், புனித அன்னை தெரேசா அவர்கள் பிறந்த நகரமாகவும் விளங்குகின்ற ஸ்கோப்யேவில் (Skopje), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், மாசிடோனியாவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு, குடிமக்கள் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புணர்வைத் தூண்டுவதாக அமையும் என்றும், ஆயர் Stoyanov அவர்கள் கூறியுள்ளார்.
மாசிடோனியாவில், அனைத்து விசுவாசிகள் மற்றும் குடிமக்கள் மத்தியில், ஒளிமயமான வருங்காலம் அமைவதற்கும், இப்பயணம் உதவும் என்ற தன் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள ஆயர் Stoyanov அவர்கள், இத்திருத்தூதுப் பயணத்திற்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
2019ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பல்கேரியா செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 7ம் தேதி மாசிடோனியாவின் ஸ்கோப்யேவில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, வத்திக்கான் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய பால்கன் நாடாகிய மாசிடோனியாவில் வாழ்கின்ற ஏறக்குறைய 21 இலட்சம் மக்களில் பெரும்பான்மையினோர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்