தேடுதல்

6ம் பவுல் அரங்கத்தில் கிறிஸ்து பிறப்பு குடிலுக்கு முன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 6ம் பவுல் அரங்கத்தில் கிறிஸ்து பிறப்பு குடிலுக்கு முன் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருவருகைக் காலம், சமாதானத்தை உருவாக்கும் காலம்

"சமாதானத்தின் இளவரசராம் இயேசுவின் வருகைக்கு நம்மையே தயாரிக்கும் ஒரு காலம் திருவருகைக் காலம். நம்மோடும், நம் அயலவரோடும் சமாதானத்தை உருவாக்கும் காலம் இது" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

திருவருகைக் காலம், சமாதானத்தை உருவாக்கும் காலம்

 

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருவருகைக் காலத்தின் பொருளை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 19, இப்புதனன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"சமாதானத்தின் இளவரசராம் இயேசுவின் வருகைக்கு நம்மையே தயாரிக்கும் ஒரு காலம் திருவருகைக் காலம். நம்மோடும், நம் அயலவரோடும் சமாதானத்தை உருவாக்கும் காலம் இது" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிட்டார் திருத்தந்தை.

மேலும், டிசம்பர் 18, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட குடிபெயர்வோர் உலக நாளையொட்டி தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை, இச்செவ்வாய் காலை திருப்பலியில் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக மற்றொரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

"கனவுகாணும் மனிதராக அல்ல, கனவுடன் வாழும் மனிதராக, கடவுளின் திட்டத்தை மதிக்கத் தெரிந்ததால், அமைதி காத்த ஒரு மனிதராக வாழ்ந்த புனித யோசேப்பைப் போல் இருப்பீர்களாக" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

டிசம்பர் 19, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.798 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 78 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், வெளியாகின்றன.

டிசம்பர் 16, ஞாயிறன்று, தன் 82வது பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்னதாக சாந்தா மார்த்தா மருந்தகத்தின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் திருத்தந்தை கொண்டாடிய பிறந்தநாள் படத்துடன் சேர்த்து, இதுவரை அவரது instagram முகவரியில், 636 படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 58 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2018, 15:33