திருத்தந்தையைச் சந்தித்த பாலஸ்தீனிய அரசுத்தலைவர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் நாக்பூர் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக, அமராவதி மறைமாவட்ட ஆயர், எலியாஸ் ஜோசப் கொன்சால்வெஸ் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று நியமித்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி, நாக்பூர் பேராயர் ஆபிரகாம் விருத்தகுலங்கரா அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, தற்போது, அப்பெரு மறைமாவட்டத்தின் பேராயராக, 57 வயது நிரம்பிய ஆயர் கொன்சால்வெஸ் அவர்களை திருத்தந்தை நியமித்துள்ளார்.
மேலும், திப்ருகார் (Dibrugarh) மறைமாவட்டத்தின் வாரிசு உரிமை ஆயராக, அம்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளையோருக்கென உருவாக்கப்பட்டுள்ள புனித யோசேப்பு இல்லத்தின் பொறுப்பாளராக பணியாற்றிவரும் அருள்பணி ஆல்பர்ட் ஹெம்ரோம் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
இதற்கிடையே, பாலஸ்தீனிய அரசுத்தலைவர், Mahmoud Abbas அவர்கள், இத்திங்களன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
பாலஸ்தீனாவுக்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும், இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே அமைதி தீர்வு காணவேண்டியதன் அவசியம் குறித்தும், அமைதிக்கும், உரையாடலுக்கும் மத்தியக் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும், அரசுத்தலைவர் Abbas அவர்களுக்கும், திருப்பீட உயர் அதிகாரிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்