தேடுதல்

2017ம் ஆண்டு உலக வறியோர் தின திருப்பலியில் 2017ம் ஆண்டு உலக வறியோர் தின திருப்பலியில் 

திருத்தந்தையுடன் இரண்டாவது உலக வறியோர் நாள்

உலக வறியோர் நாளை சிறப்பிக்கும் விதமாக, 6000 வறியோருடன் திருப்பலி, மதிய விருந்து, மற்றும், வறியோருக்கு ஒரு வார இலவச மருத்துவ உதவிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 18, வரும் ஞாயிறன்று, சிறப்பிக்கப்படும் உலக வறியோர் நாளையொட்டி, அவர்களுடன் இணைந்து, காலை திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 6000 ஏழைகளுடன் அமர்ந்து, மதிய உணவருந்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவுற்ற இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த உலக வறியோர் நாள், கடந்த ஆண்டு முதன் முறையாக சிறப்பிக்கப்பட்டது.

புதிய நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீட அவையால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்த உலக வறியோர் நாள் நடவடிக்கைகள், வரும் ஞாயிறன்று, உரோம் நகர் புனித பேதுரு பேராலயத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து பங்குதளங்களிலும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஞாயிறன்று காலை, 10 மணிக்கு, உரோம் நகர் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில், ஏறத்தாழ 6000 வறியோரும், அவர்களுடன் பணிபுரியும் தன்னார்வத் தொண்டர்களும் கலந்து கொள்வதுடன், திருப்பலியைத் தொடர்ந்து, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் திருத்தந்தையுடன் இடம்பெறும் மதிய விருந்திலும் கலந்து கொள்வர்.

இதற்கிடையே, உலக வறியோர் நாளை முன்னிட்டு, இத்திங்கள் முதல், இவ்வாரம் முழுவதும், இலவச மருத்துவ முகாமை புனித பேதுரு வளாகத்தில் நிறுவி, மருத்துவ உதவிகளை வறியோருக்கு தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை வழங்கி வருகிறது, திருப்பீடம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2018, 16:17