தேடுதல்

‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச்செய்தியை வழங்கும் திருத்தந்தை - கோப்புப் படம் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச்செய்தியை வழங்கும் திருத்தந்தை - கோப்புப் படம் 

திருத்தந்தையின் அடுத்த மூன்று மாத நிகழ்ச்சிகள்

அடுத்த மூன்று மாதங்களில், திருத்தந்தை தலைமையேற்று நடத்தும் வழிபாட்டு நிகழ்வுகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர், டிசம்பர், சனவரி என, அடுத்து வரும் மூன்று மாதங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்கும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

உரோம் நகரின் இலவுரந்தினோ பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நவம்பர் மாதம் 2ம் தேதி பிற்பகல் 4 மணிக்கு, அனைத்து ஆன்மாக்களின் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஓராண்டில் உயிரிழந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான திருப்பலியை, நவம்பர் 3ம் தேதி காலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், நிறைவேற்றுவார். மேலும், அதே மாதம் 18ம் தேதி, ஞாயிறன்று, தூய பேதுரு பேராலயத்தில் உலக வறியோர் தின திருப்பலியை காலையில் நிறைவேற்றுவார்.

டிசம்பர் மாதம் 8ம் தேதி மாலை உரோம் நகரின் Spagna சதுக்கம் சென்று, அங்குள்ள அன்னை மரி திருஉருவத்திற்கு வணக்கம் செலுத்துவார் திருத்தந்தை. மேலும், குவாதாலூப்பே அன்னைமரியா திருவிழாவையொட்டி, 12ம் தேதி மாலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றுவார்.

டிசம்பர் 24ம் தேதி இரவில், இயேசு பிறப்புத் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, 25ம் தேதி நண்பகலில் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச்செய்தியை வழங்குவார். ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ம் தேதி மாலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், நன்றி வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2019ம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதி, இறைவனின் தாய் அன்னை மரியா என்ற திருவிழாவையும், உலக அமைதி தினத்தையும் முன்னிட்டு, தூய பேதுரு பேராலயத்தில் திருத்தந்தையின் திருப்பலி இடம்பெறும்.

சனவரி 6ம் தேதி திருக்காட்சி திருவிழாவை முன்னிட்டு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருப்பலியும், 13ம் தேதி இயேசுவின் திருமுழுக்கு விழாவையொட்டி, வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கும் திருப்பலியும் திருத்தந்தையால் நிறைவேற்றப்படும்.

உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஜனவரி 23 முதல் 28 வரை பானமாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2018, 17:24