விபத்தாலும், இயற்கைப் பேரிடராலும் பாதிக்கப்பட்டோருக்கு செப உறுதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
தாய்வானின் Yilan மாவட்டத்தில் இடம்பெற்ற இரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள், மற்றும், காயமுற்றோர் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தி ஒன்று அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தாய்வானில் இரயில் பெட்டிகள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் உறவினர்களை இழந்து துன்புறுவோருக்கு தன் செப உறுதியை வழங்குவதாகவும், திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் செய்தி, குணப்படுத்தும், பலமளிக்கும், மற்றும், அமைதியை வழங்கும் இறையாசீரை திருத்தந்தை, இறைவனிடம் வேண்டுவதாகவும் உரைக்கிறது.
தாய்வானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள Xinma இரயில் நிலையத்திற்கு அருகே 366 பயணிகளுடன் பயணம் செய்த Puyuma விரைவு இரயிலின் எட்டுப் பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்து, 187 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுள் 3 குழந்தைகளும் அடங்குவர்.
மேலும், Trinidad மற்றும் Tobago நாட்டில் அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கல் தந்தியை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்