அருளாளர் மறைசாட்சி Pino Puglisi
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
அருளாளர் Pino Puglisi அவர்கள், மறைசாட்சியாக கொல்லப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இச்சனிக்கிழமையன்று அப்பகுதிக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாஃபியா கும்பலால் கொல்லப்பட்ட அருளாளர் Pino Puglisi அவர்கள் பற்றி, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டரில் பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் Pino Puglisi அவர்கள், நன்மைத்தனத்தைப் பறைசாற்றினார் என்று கூறியுள்ளார்
இத்தாலியில் மிகவும் பிரபலமான Cosa Nostra எனப்படும் மாஃபியா அமைப்பு, பலேர்மோ நகரை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் கட்டளையின்பேரில், 25 ஆண்டுகளுக்குமுன், செப்டம்பர் 15ம் தேதி, அருள்பணியாளர் Pino Puglisi அவர்கள், கொல்லப்பட்டார். இந்த அருள்பணியாளர் வாழ்ந்த மற்றும் இறந்த புனித கயத்தானோ பங்குத்தளத்தைப் பார்வையிட்டு, பலேர்மோ பேராலயத்தில், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், குருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆகியோரையும் திருத்தந்தை சந்தித்தார்.
1937ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பிறந்த Pino Puglisi அவர்கள், தனது 56வது வயதில், தான் பிறந்த அதே நாளில் கொல்லப்பட்டார். தனது 16வது வயதில் குருத்துவ கல்லூரியில் சேர்ந்த அவர், 1960ம் ஆண்டு குருவாகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். மறைமாவட்ட அளவில் இறையழைத்தல் ஊக்குனராகவும் இவர் பணியாற்றினார். 1990ம் ஆண்டில், புனித கயத்தானோ பங்குத்தளப் பொறுப்பை ஏற்றார் இவர். திருத்தந்தையின் மேய்ப்பராக நான் மாறியுள்ளேன் என்று உரைத்து, 1991ம் ஆண்டில், ‘நம் இறைத்தந்தை வரவேற்கும் மையம்’ என்ற ஒரு மையத்தைத் தொடங்கினார்.
வயதானவர்கள், கைவிடப்பட்டோர், எழுத்தறிவில்லாத இளம் பருவத்தினர், போன்றோருக்கு இம்மையத்தை நடத்தினார் அருளாளர் Pino Puglisi.
வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மையால் தனது பங்குத்தளத்திலிருந்து பெரும்பாலானோர் மாஃபியா குற்றக்கும்பலில் இணைந்ததைக் கண்ட அவர், அதனைத் தடுக்க நடவடிக்கையில் இறங்கினார். இதனால் அந்தக் குற்றக்கும்பலால் அவர் கொல்லப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்