வத்திக்கான் அருங்காட்சியக புரவலர்களைப் பாராட்டிய திருத்தந்தை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அருங்காட்சியக புரவலர்களின் தாராள மனம், திருஅவையின் கலைவரலாற்றை காத்து வருகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு பன்னாட்டுக் குழுவினரிடம் கூறினார்.
வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பராமரிப்பிற்கென நிதி உதவி வழங்கும் புரவலர்களின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள 40க்கும் மேற்பட்ட பன்னாட்டு பிரதிநிதிகளை, இவ்வெள்ளி காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்கள் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி கூறினார்.
மத நம்பிக்கையை வளர்க்க கலைப்படைப்புகள் பெரிதும் உதவுகின்றன என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் உலகப் புகழ்பெற்ற படைப்புக்களைக் காண வருவோரும், மத உணர்வுகளால் தூண்டப்படுவதை நாம் மறுக்க இயலாது என்று வலியுறுத்திக் கூறினார்.
இதற்கிடையே, தங்கள் அத் லிமினா சந்திப்பிற்கென வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
மேலும், இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "இறைவனில் மட்டும் நமது மனம் அமைதி காணும்போது, வாழ்வு கூடுதல் அழகாக மாறுவதை நாம் கண்டுகொள்கிறோம்" என்ற சொற்கள் இடம்பெற்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்