தேடுதல்

புதிய ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் புதிய ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஆயர் பேரவைகளின் தலைவர்களோடு முக்கிய கூட்டம்

2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு முக்கியமான கூட்டத்திற்கு வரும்படி, உலகெங்கிலும் உள்ள ஆயர் பேரவைகளின் தலைவர்களை திருத்தந்தை அழைத்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாலின முறைகேடுகளிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் வழிகளைக் கலந்துபேச, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் உலகெங்கிலும் உள்ள ஆயர் பேரவைகளின் தலைவர்களை வத்திக்கானுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தையின் பணிகளுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள கர்தினால்கள் குழுவின் 26வது அமர்வின் இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று, வத்திக்கான் செய்தித் துறையின் உதவி இயக்குனர் பலோமா கார்சியா ஒவயேரோ அவர்கள், இப்புதன் மதியம், செய்தியாளர்களிடம் கூறினார்.

உலகின் அனைத்து ஆயர் பேரவைகளின் தலைவர்களும், இன்னும் திருத்தந்தையால் அழைப்பு பெரும் ஏனைய பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் இக்கூட்டம், வருகிற பிப்ரவரி மாதம், 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய, வத்திக்கானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 திங்கள் முதல், 12 இப்புதன் முடிய, வத்திக்கானில் நடைபெற்ற கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 26வது அமர்வில், திருப்பீடத்திலும், வத்திக்கானிலும் துவக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன என்று உதவி இயக்குனர் ஒவயேரோ அவர்கள் கூறினார்.

இந்த அமர்வின் இறுதியில், கர்தினால்களின் ஆலோசனைக் குழுவில் பங்கேற்ற அனைத்து கர்தினால்களும் திருத்தந்தையுடன் தாங்கள் கொண்டிருக்கும் ஒன்றிணைப்பை மீண்டும் வலியுறுத்தினர் என்றும், ஆலோசனைக் குழுவின் 27வது அமர்வு, வருகிற டிசம்பர் மாதம் 10ம் தேதி முதல், 12ம் தேதி முடிய நடைபெறும் என்றும் உதவி இயக்குனர் ஒவயேரோ அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2018, 15:27