திருத்தந்தையின் மூவேளை செப உரை 050818 திருத்தந்தையின் மூவேளை செப உரை 050818 

உண்மை, அன்பு, நீதிக்கான ஏக்கம் கிறிஸ்துவில் நிறைவடையும்

உடலின் தேவைகளையல்ல, உள்ளத்தின் தேவைகளை நிறைவுச் செய்யவே இயேசு நம்மை தேடி வருகிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வின் தினசரி தேவைகள் குறித்து நாம் கவலைப்படுவது தவறல்ல, ஆனால், இயேசுவுடன் நம் உறவை பலப்படுத்துவது அதைவிட முக்கியத்துவம் நிறைந்தது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்பத்தைப் பலுகச் செய்த புதுமைக்குப்பின், இயேசுவைத் தேடிய மக்களைப் பார்த்து அவர், என் அருங்குறிகளைக் கண்டதால் அல்ல, மாறாக, வயிறார உண்டதாலேயே என்னைத் தேடுகிறீர்கள் எனக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையத் தேவைகள் குறித்து கவலைப்படும் நாம், உண்மைக்கும், நீதிக்கும், அன்புக்குமான நம் பசியை நிறைவுச் செய்ய வந்த இயேசுவைக் குறித்து அதிகம் அதிகமாக சிந்திக்க வேண்டும் என கூறினார்.

தன்னைத் தேடுபவர்கள் தன்னைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அது இருக்க வேண்டும் என விரும்பும் இயேசு, தன்னுடனான மக்களின் சந்திப்பு, இவ்வுலக ஏக்கங்களையும் தாண்டியதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்பத்தைப் பலுகச் செய்த புதுமையானது, இயேசுவையே நமக்களித்த இறைக்கொடையின் அடையாளமாகும், ஏனெனில், வாழ்வின் அப்பமான இயேசு, நம் உடல் தேவைகளையல்ல, மாறாக, நம் ஆன்மீகத் தேவைகளை நிறைவுச் செய்ய  முன்வருகிறார் என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2018, 12:50