குடும்பங்களின் உலக மாநாடு - திருத்தந்தையின் டுவிட்டர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஆகஸ்ட் 21, செவ்வாய் மாலை முதல், 26 வருகிற ஞாயிற்றுக்கிழமை முடிய, அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்றுவரும் குடும்பங்களின் உலக மாநாட்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றுமொரு கருத்தை தன் டுவிட்டர் செய்தியாக ஆகஸ்ட் 23, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார்.
"வாழ்வின் தொட்டிலாக, அன்பையும், பிறரை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் கற்றுத்தரும் பள்ளியாக, குடும்பம் உள்ளது. இறைவனின் மறையுண்மையைக் காணக்கூடிய சன்னலாகவும் அது அமைந்துள்ளது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக அமைந்தன.
அயர்லாந்தின் 26 மறைமாவட்டங்களிலும், இச்செவ்வாய் மாலையில், குடும்பங்களின் உலக மாநாடு ஒரே வேளையில் துவக்கப்பட்டது என்றும், இந்தத் துவக்கத் திருப்பலிகளையொட்டி, அயர்லாந்தின் அனைத்து கோவில் மணிகளும் முழங்கின என்றும், இவ்வுலக மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
"குடும்பத்தின் நற்செய்தி: உலகுக்கு மகிழ்வு" என்ற மையக்கருத்துடன் நடைபெற்றுவரும் குடும்பங்களின் உலக மாநாட்டில், ஆகஸ்ட் 25, 26 ஆகிய இரு இறுதி நாட்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்