தேடுதல்

Knock அன்னைமரியா திருத்தலம் Knock அன்னைமரியா திருத்தலம்  

Knock திருத்தலம் திருத்தந்தைக்காகக் காத்திருக்கின்றது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 26ம் தேதி செல்லவிருக்கும் அயர்லாந்தின் Knock அன்னைமரியா திருத்தலத்தில் "விசுவாசமும் குடும்பமும்" என்ற தலைப்பில் நவநாள் பக்தி முயற்சிகள் தொடங்கியுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அயர்லாந்தின் டப்ளின் நகரில், இம்மாதம் 21ம் தேதி, 9வது உலக குடும்பங்கள் மாநாடு தொடங்கவிருக்கும்வேளை, அந்நாட்டின் Knock தேசிய  அன்னைமரியா திருத்தலத்தில், இக்குடும்ப மாநாட்டை மையப்படுத்தி, பாரம்பரிய நவநாள் பக்தி முயற்சிகள் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளன.

"குடும்பத்தின் நற்செய்தி, உலகிற்கு மகிழ்வு"  என்ற தலைப்பில் நடைபெறும், இந்த உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஆகஸ்ட் 25, சனிக்கிழமையன்று டப்ளின் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 26ம் தேதி ஞாயிறன்று Knock அன்னைமரியா திருத்தலம் செல்வார்.

Knock அன்னை மரியா காட்சி

அக்காலத்தில் கிராமமாக இருந்த Knockன் பங்கு ஆலயத்திற்கருகில், 1879ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி, ஆறு முதல் 75 வயதுக்குட்பட்ட 15 பேர், கனமழைக்கு ஒதுங்கிக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில், அன்னை மரியாவை அவர்கள் காட்சியில் கண்டனர். ஏறத்தாழ இரண்டு மணி நேரம், மழையில் அன்னை மரியாவைக் காட்சியில் கண்டு அவர்கள் செபித்துக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில், புனித யோசேப்பும், நற்செய்தியாளர் புனித யோவானும், அன்னை மரியாவுக்கு அருகில் அமைதியாக இருந்துள்ளனர். காட்சி முடிந்தபோது, கனமழை பெய்தும், அந்த 15 பேரும் சிறிதளவுகூட நனையவில்லை எனச் சொல்லப்படுகின்றது.   

அயர்லாந்து நாடு முழுவதையுமே உலுக்கிய இக்காட்சி, Knock நகரின் வரலாற்றைச் சிறப்பாக்கியது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் 15 இலட்சத்துக்கு அதிகமான திருப்பயணிகள் அத்திருத்தலம் செல்கின்றனர்.

1940ம் ஆண்டில் ஐம்பதாயிரம் அயர்லாந்து மக்கள், திருப்பயணமாக அங்குச் சென்று, உலக அமைதிக்காகச் செபித்தனர். 1954ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் மரியா ஆண்டு அறிவிக்கப்பட்டதையடுத்து, இலட்சக்கணக்கான திருப்பயணிகள் Knock அன்னை மரியா திருத்தலம் சென்றனர். அவ்வாண்டில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் சார்பாக, அன்னை மரியாவுக்கு மணிமகுடம் சூட்டப்பட்டது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2018, 13:49