பீடப் பணியாளர்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் பீடப் பணியாளர்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை : கடவுளோடு நேருக்கு நேர் உறவு அவசியம்

இயேசு சபை துறவிகளில் ஒருவரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித லொயோலா இஞ்ஞாசியார் விழாவுக்கென டுவிட்டர் செய்தி வெளியிட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

செபத்திற்கும், இறைவார்த்தையைக் கேட்பதற்கும், நாம் நேரம் ஒதுக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

இயேசு சபையை ஆரம்பித்தவரான புனித லொயோலா இஞ்ஞாசியார் விழாவான ஜூலை 31, இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நாம் கடவுளோடு எப்போதும் ஆழமான உறவு வைத்துக்கொண்டே இருக்க வேண்டும் மற்றும், செபத்திற்கும், இறைவார்த்தையைக் கேட்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், 19 நாடுகளிலிருந்து ஏறத்தாழ எழுபதாயிரம் பீடப் பணியாளர்களை ஜூலை 31, இச்செவ்வாய் மாலை ஆறு மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்திக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பலியில் அருள்பணியாளர்களுக்கு உதவிசெய்யும், 13க்கும் 23 வயதுக்கும் உட்பட பீடப் பணியாளர்கள், உரோம் நகரில் நடத்தும், 12வது பன்னாட்டு திருப்பயணத்தின் ஒரு நிகழ்வாக, திருத்தந்தையைச் சந்திக்கின்றனர். இந்நிகழ்வு கேள்வி பதில் முறையில் அமைகின்றது.

“அமைதியை நாடித் தேடு” என்ற தலைப்பில் பீடப் பணியாளர்களின் இந்த 12வது பன்னாட்டு திருப்பயணம் நடைபெறுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2018, 15:00