தேடுதல்

லித்துவேனிய திருத்தூதுப்பயண இலச்சினை லித்துவேனிய திருத்தூதுப்பயண இலச்சினை 

செப்.22-25ல் பால்டிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ்

செப்டம்பர் 22-25ம் தேதி வரை, லித்துவேனியா, லாத்வியா மற்றும் எஸ்டோனியா நாடுகளின் Tallinn, Kaunas, Riga, Vilnius ஆகிய நான்கு நகரங்களில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி டிரிசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,06,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 22ம் தேதி முதல், 25ம் தேதி வரை, லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளுக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

செப்டம்பர் 22, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ விமான நிலையத்திலிருந்து, லித்துவேனியா நாட்டின் Vilnius நகருக்குப் புறப்படும் திருத்தந்தை, 11.30 மணிக்கு வில்னியுஸ் பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடைவார். அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர், அந்நகர் அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவரைச் சந்தித்துப் பேசுவார்.

பின்னர், அந்த மாளிகை வளாகத்தில், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்திக்கும் திருத்தந்தை, மாலை 4.30 மணிக்கு இரக்கமுள்ள அன்னை திருத்தலம் சென்று செபித்த பின்னர், அத்திருத்தல வாளாகத்தில் இளையோரைச் சந்திப்பார்.

செப்டம்பர் 23, ஞாயிறு காலை 8.15 மணிக்கு, Vilnius நகரிலிருந்து காரில் காவ்னாஸ்(Kaunas) செல்லும் திருத்தந்தை, அந்நகரின் சாந்தாகோஸ் பூங்காவில் திருப்பலி நிறைவேற்றி, மூவேளை செப உரையும் வழங்குவார்.

ஆயர்களோடு மதிய உணவருந்திய பின்னர், காவ்னாஸ் பேராலயத்தில், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவ மாணவர்கள் ஆகியோரைச் சந்திக்கும் திருத்தந்தை, Vilnius நகரின் ஆக்ரமிப்பு மற்றும் சுதந்திரப் போராட்ட அருங்காட்சியத்தைப் பார்வையிடுவார்.

செப்டம்பர் 24, திங்கள் காலை 7.20 மணிக்கு வில்னியுஸ் நகரிலிருந்து லாத்வியா நாட்டின் Riga நகருக்கு விமானத்தில் புறப்படும் திருத்தந்தை, காலை 8.20 மணிக்கு Riga நகர் விமான நிலையத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வார். பின்னர், அந்நகர் அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவரைச் சந்தித்துப் பேசிய பின்னர், அந்த மாளிகையிலுள்ள ஓர் அறையில், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்திப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மாலையில், Aglona இறையன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, அங்கிருந்து வில்னியுஸ் நகருக்கு ஹெலிகாப்டரில் செல்வார்.

செப்டம்பர் 25, செவ்வாய் காலை 8.30 மணிக்கு Vilnius பன்னாட்டு விமான நிலையம் சென்று எஸ்டோனியா நாட்டின் தலைநகர் Tallinn சென்று, அங்கும் அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்திப்பார் திருத்தந்தை. லூத்தரன் சபையின் புனித சார்லஸ் ஆலயத்தில் இளையோரைச் சந்திக்கும் திருத்தந்தை, அன்று மாலை 6.45 மணிக்கு உரோமைக்குப் புறப்படுவார். இரவு 9.20 மணிக்கு உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2018, 16:18