விசுவாசத்தில் முழுமையாக கையளிப்பதே, குணம்பெறுதலின் முதல் படி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஜூலை,02,2018. கிறிஸ்தவர்கள் மரணத்தைக் கண்டு அஞசத் தேவையில்லை, மாறாக, இதயங்களைக் கடினமாக்கி, ஆன்மாவைக் கொல்லும் பாவம் குறித்தே அச்சம் கொள்ளவேண்டும் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுலகில் உடலால் மரணம் அடைவதென்பது, ஒரு நெடிய தூக்கத்தைப் போன்றது, ஆகவே, அது குறித்து மனத்தளர்ச்சியடைய வேண்டாம், ஆனால், கடின மனம் என்பது இதயத்தின் மரணத்தைக் குறிப்பதாகும், அதற்கே நாம் அஞ்சவேண்டும் என தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நற்செய்தியில் கூறப்பட்ட இயேசுவின் இரு புதுமைகளை மையமாக வைத்து தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பெரு நோயால் அவதியுற்ற பெண்ணை குணமாக்கிய புதுமையிலும், யாயீரின் மகளுக்கு உயிரளித்த புதுமையிலும், விசுவாசமே மையமாக இருப்பதைக் காண்கிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவில் நம்பிக்கை வைக்கும் எவரும், அவரை அணுக முடியும் என்பது, இங்கு நிரூபிக்கப்படுகிறது என்றார்.
நாம் குணப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, இயேசுவில் முழுமையக சரணடைந்தால், அவரின் இதயத்தில் நாம் இடம்பிடிக்கலாம் எனவும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்