சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி 090520 சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி 090520 

பிறரன்பின் புதல்வியர் சபை அருள்சகோதரிகளுக்காகச் செபிப்போம்

இயேசு உயிர்த்த நாள் காலையில், உலக அதிகாரமும் பணமும் உண்மையை மறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன, கிறிஸ்தவர் தனது நம்பிக்கையை, உலக அதிகாரத்திலும், பணத்திலும் அல்ல, மாறாக, அதனை இயேசு கிறிஸ்துவிலும், தூய ஆவியாரிலும் வைக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இன்று திருஅவை புனித லூயிஸ் து மரியாக் (Luisa de Marillac) அவர்களை நினைவுகூர்கின்றது, வத்திக்கானில் சிறார் மருத்துவமனையை கடந்த நூறு ஆண்டுகளாக நடத்திவரும், Vincentian சபை அருள்சகோதரிகளுக்காகச் செபிப்போம், இறைவன் இச்சகோதரிகளை ஆசீர்வதிப்பாராக என்று, மே 09, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித லூயிஸ் து மரியாக் திருநாள், வழக்கமாக மார்ச் மாதம் 15ம் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாண்டு மார்ச் மாதம் தவக்காலமாக இருந்ததால், இத்திருநாள் இன்று சிறப்பிக்கப்படுகின்றது. வத்திக்கானில், சாந்தா மார்த்தா இல்லத்தில் பணியாற்றும் அருள்சகோதரிகள், பிறரன்பின் புதல்வியர் சபையைச் சேர்ந்தவர்கள். இச்சபை, புனித லூயிஸ் து மரியாக் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப்புனிதர், புனித வின்சென்ட் தெ பால் அவர்களுடன் இணைந்து இச்சபையை ஆரம்பித்தார். ஏழை நோயாளிகளுக்குப் பணியாற்றுவதே இச்சபையின் முக்கிய நோக்கம். பிறரன்பின் புதல்வியர் சபை, Vincentian குழுமத்தைச் சார்ந்தது. புனித லூயிஸ் து மரியாக் அவர்களின் படமும், திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றிய பீடத்திற்கருகில் வைக்கப்பட்டிருந்தது.

மறையுரை

இச்சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு, வத்திக்கானில் சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார், திருஅவையை வளரச் செய்கின்ற அதேவேளை, பொறாமை, அதிகாரம் மற்றும் பணத்தால், தீய ஆவி திருஅவையை அழிக்க முயற்சிக்கின்றது என்று, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

போதனையும், இன்னல்களும்

இயேசு குறித்து பவுலடிகளார் கூறியதை, அந்தியோக்கியா நகரைச் சேர்ந்த யூதர்கள் எதிர்த்து, பொறாமையால் நிறைந்து, அவரைப் பழித்துரைத்தது பற்றிச் சொல்லும், திருத்தூதர் பணிகள் நூல் பகுதியை (தி.ப.13:44-52) மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த யூதர்கள், அந்நகரின் பக்தியுள்ள மதிப்புக்குரிய பெண்கள் மற்றும், நகரின் முதன்மைக் குடிமக்களைத் தூண்டிவிட்டு, பவுலையும், பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கியதால், அவ்விருவரும் அப்பகுதியைவிட்டு கட்டாயமாக வெளியேறவேண்டிய நிலை உருவானது என்று திருத்தந்தை கூறினார்.

கடவுளின் வல்லமை பற்றிச் சொல்கையில், “ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்... (தி.பா.98,1-2)” என்ற இன்றைய திருப்பலியின் பதிலுரைப் பாடலைக் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவரின் வார்த்தையைக் கேட்பதற்காக, அந்தியோக்கியா நகர மக்கள் அனைவரும் கூடியிருந்தனர், ஏனெனில், பவுலும், பர்னபாவும் வல்லமையுடன் போதித்தனர் மற்றும், தூய ஆவியாரும் அவர்களுக்கு உதவினார் என்று கூறிய திருத்தந்தை, பெருந்திரளான மக்களைப் பாரத்த யூதர்கள், பொறாமையால் நிறைந்து பவுலின் போதனைகளை, பழித்துரைத்து அவமானப்படுத்தினர் என்றும் கூறினார்.

தூய ஆவிக்கும், தீய ஆவிக்கும் இடையே போராட்டம்

ஒருபுறம், தூய ஆவியார் திருஅவையை வளரச் செய்கிறார், மறுபுறம், தீய ஆவி, திருஅவையை அழிப்பதற்கு முயற்சிக்கின்றது என்றும், இது ஒவ்வொருவரின் வாழ்விலும் இடம்பெற்று வருகின்றது என்றும், ஒருவர் வாழ்வில் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், பகைவன் அதை அழிக்க வருகிறான் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஒருபுறம், இறைவார்த்தை திருஅவையை வளரச்செய்கின்றது, மறுபுறம் அடக்குமுறைகளும் உள்ளன என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, கடவுளின் ஆறுதல் மற்றும், உலகின் சித்ரவதைகளுக்கு இடையே, திருஅவை, முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று விளக்கினார்.

பொறாமை

திருஅவையில் இன்னல்கள் இல்லாதபோது ஏதோ ஒன்று குறைவுபடுகின்றது என்றும், சாத்தான் அமைதியாக இருந்தால், காரியங்கள் நன்றாக இடம்பெறாது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்பை அழிப்பது சாத்தானின் கோபமே என்றும், இந்த அறிவிப்பை அழிப்பதற்கு, சாத்தான் பயன்படுத்தும் ஆயுதம், பொறாமை என்றும் எடுத்தியம்பினார்.    

போராட்டம் என்பது, எப்போதும் இருக்கும், ஆயினும், தூய ஆவியார் திருஅவையில் நல்லிணக்கத்தை உருவாக்குகிறார் மற்றும், அதை தீய ஆவி அழிக்கின்றது, அது இன்றும்கூட இடம்பெறுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இந்த உலக அதிகாரங்கள், இந்தப் பொறாமையின் கருவியாக உள்ளது என்று கூறினார்.

பணம், அதிகாரம்

உலக அதிகாரங்கள், நல்லவையாக இருக்கலாம், மக்கள் நல்லவர்களாக இருக்கலாம், ஆயினும் அதிகாரம் தன்னிலே எப்போதும் ஆபத்தானது என்றும், இந்த உலகின் வல்லமை, கடவுளின் வல்லமைக்கு எதிரானது என்றும், அதிகாரத்திற்குப் பின்னால் இருப்பது பணம் என்றும், திருத்தந்தை கூறினார்.

இயேசு உயிர்த்த நாள் காலையில், உலக அதிகாரமும் பணமும் உண்மையை மறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன, கிறிஸ்தவர் தனது நம்பிக்கையை, உலக அதிகாரத்திலும், பணத்திலும் அல்ல, மாறாக, அதனை இயேசு கிறிஸ்துவிலும், தூய ஆவியாரிலும் வைக்கவேண்டும் என்று கூறி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2020, 10:08
அனைத்தையும் படிக்கவும் >