சாந்தா மார்த்தாவில் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தாவில் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

திருத்தந்தை - தூய ஆவியார் நம் வாழ்வுப்பயண தோழர்

தூய ஆவியாரோடு நாம் பயணிக்காமலும், வாழ்வில் தூய ஆவியாருக்கு மைய இடத்தை வழங்காமலும் இருக்கும்வரை, நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பலவீனங்கள் மற்றும் மரணத்தினின்று நம்மை உயிர்பெற்றெழச் செய்யும் தூய ஆவியாருக்கு வாழ்வில் இடம் ஒதுக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார்.

வத்திக்கானில், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஏப்ரல் 30, இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், ‘ஒருவர் எப்படி மறுபடியும் பிறக்க முடியும்?’ என, நிக்கதேம் அவர்கள், இயேசுவிடம் கேட்ட கேள்வியை (யோவா.3:7) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் தூய ஆவியாரின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.

இந்நாளைய திருப்பலியின் நற்செய்திப் பகுதியிலிருந்து (யோவா.3:7-15) தன் மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, கடவுளின் வல்லமையால் மட்டுமே நம் பாவநிலையிலிருந்து, மறுபிறப்பு அடைய இயலும், இதற்காகவே, நம் ஆண்டவர்  தூய ஆவியாரை நமக்கு அனுப்பினார் என்று உரைத்தார்.

நிக்கதேம் அவர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி போன்று நாமும் கேட்கின்றோம், இக்கேள்விக்கு, இயேசு மேலிருந்து மறுபடியும் பிறக்க முடியும் என்பது பற்றிப் பேசுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவரின் உயிர்ப்புக்கும், மறுபடியும் பிறப்பதற்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிக் கூறினார்.

ஆண்டவரின் உயிர்ப்பு பற்றிய செய்தி, தூய ஆவியாரின் கொடை என்றும், உண்மையில், உயிர்த்த இயேசு, தம் திருத்தூதர்களுக்கு முதன்முறையாகத் தோன்றியவேளையில், தூய ஆவியாரைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கூறினார், தூய ஆவியார் இன்றி நம்மால் எதையும் செய்ய இயலாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

நம் கிறிஸ்தவ வாழ்வுக்கு முக்கிய உந்து சக்தியாக இருப்பவர் தூய ஆவியார் என்றும், அவர் நம்மோடு இருந்து நம்மை மாற்றுகிறார், அவர் இறைத்தந்தையிடமிருந்து, இயேசுவிடமிருந்து நாம் பெற்ற கொடை என்றும் திருத்தந்தை கூறினார்.

எனவே நம் வாழ்வில், தூய ஆவியாருக்கு எத்தகை இடத்தை அளித்திருக்கின்றோம் என சிந்திப்போம் என்று, தனது மறையுரையில் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வுப் பயணத்தில் துணை வருபவர் தூய ஆவியார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் என்று கூறினார். 

திருத்தந்தையின் டுவிட்டர்

மேலும், “தூய ஆவியாரோடு நாம் பயணிக்காமலும், வாழ்வில் தூய ஆவியாருக்கு முக்கிய இடத்தை வழங்காமலும் இருக்கும்வரை, நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது என்ற விழிப்புணர்வை அருளுமாறு, ஆண்டவரிடம் மன்றாடுவோம்” என்ற சொற்கள், ஏப்ரல் 30, இச்செவ்வாயன்று திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாயின. இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி இச்செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 April 2019, 12:22
அனைத்தையும் படிக்கவும் >