போர்களால் ஏற்படும் செலவுகளை நலிந்தவர்கள் சுமக்கின்றனர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
கடவுள் கருத்துக்களோடு அல்ல, மாறாக, இதயத்தோடு நம்மை அன்புகூர்கின்றார் என்றும், இன்றைய உலகில், இனிப்பு மிட்டாய்கள் போன்று வீசியெறியப்படும் குண்டுவெடிப்புகள், பேரிடர்கள் மற்றும் சித்ரவதைகளைக் கண்டு, கண்ணீர் சிந்தும் அருளை, கடவுளிடம் நாம் கேட்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை மறையுரையில் கூறினார்.
வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் பிப்ரவரி 19, இச்செவ்வாய் காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடக்க நூலில், நோவா காலத்து பெருவெள்ளம் பற்றிக் கூறும் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.
நோவா காலத்து பெருவெள்ளத்தை, இக்காலத்து போர்களோடு ஒப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, விழாக்களின் செலவுகளைச் செலுத்துகின்றவர்களாக இருக்கின்ற, பசித்திருப்போர், அநாதைச் சிறார், நலிந்தவர்கள், மற்றும் ஏழைகளின் துன்பங்கள் பற்றி நினைவுகூர்ந்து, துன்புறும் இந்த நம் சகோதரர், சகோதரிகளுக்கு, உடன்பிறந்த உறவாகவும், நம் பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் வாழ்கின்ற, மனித மற்றும் இறையுணர்வு கொண்ட ஓர் இதயத்தை நாம் கொண்டிருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கடவுள் தீமைகளைக் கண்டு வருந்துகிறார்
மனிதரின் தீமைகளை நினைத்து வேதனையடைந்து, அவர்களை ஏன் படைத்தோம் என கடவுள் வருந்துகின்றார் என்றும், கடவுளின் இந்த வேதனை உணர்வுகள் கருத்தளவில் அல்ல, மாறாக அவர் உண்மையிலேயே உணர்வளவில் துன்புகிறார் என்றும், திருத்தந்தை கூறினார்.
நலிந்தவர்கள், சிறியோர், பசித்திருக்கும் சிறாரின் எண்ணிக்கை, அமைதியான சூழலில் வளரமுடியாத சிறார், போர்களில் கொலை செய்யப்பட்ட பெற்றோரை இழந்த சிறார், சிறார் படை வீரர்கள் போன்றோரை நினைத்துப் பார்ப்போம் என்றும், மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இயேசுவைப் போன்று மனித இதயம் கொண்டிருக்க கடவுளிடம் வரம் கேட்போம் என்று கூறினார்.
பெருவெள்ளத்தின் மாபெரும் துன்பங்கள், அதாவது இக்காலப் போர்கள் என்ற பெருந்துன்பங்களின் செலவினங்கள், வாழ்வில் முன்னேற வழியில்லாத, ஏழைகள், நலிவுற்றோர் மற்றும், சிறியோர் மீது சுமத்தப்படுகின்றன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவற்றை நினைத்து கடவுள் மனம் வருந்துவதை நினைத்துப் பார்ப்போம் என்று கூறினார்.
இத்தகைய பெருந்துன்பங்கள், கடவுளின் படைப்பை அழிக்க விரும்பும் சாத்தானின் வேலைகள் என்றுரைத்த திருத்தந்கை, உலகின் தீமைகளை நினைத்து மனம் வேதனைப்படும் ஆண்டவருக்கு நாம் ஆறுதலாக இருப்போம், செபத்தில் ஒன்றித்திருப்போம் என்று கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்