தேடுதல்

2018.06.18-சாந்தா மார்த்தா இல்ல திருப்பலி 2018.06.18-சாந்தா மார்த்தா இல்ல திருப்பலி  (Vatican Media)

சர்வாதிகாரப் பாதை மக்களை அழிப்பதற்கு முதல் படி

நாபோத் என்பவரின் உரிமைச் சொத்தான திராட்சைத் தோட்டத்தை, அரசன் ஆகாபு வாங்க விரும்பினார். அதை அளிக்க மறுத்தபோது நாபோத், பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டார். பல நாடுகள் அல்லது அரசுகளின் தலைவர்கள் இதே முறையை இன்றும் பின்பற்றுகின்றார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன்,18,2018. அவதூறான பொய்ப்பிரச்சாரம், மக்களை அல்லது நிறுவனங்களை அழிப்பதற்கு இட்டுச்செல்லும் முதல்படி என்றும், யூதர்கள் கொல்லப்பட்ட ஆஷ்விஷ் வதைமுகாமில் முடிந்த, சர்வாதிகாரப் போக்கு கொண்ட பலரின் செயல்கள் இதற்குச் சான்று என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறினார்.

இத்திங்கள் காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, நாபோத் என்பவரின் உரிமைச் சொத்தான திராட்சைத் தோட்டத்தை, அரசன் ஆகாபு வாங்க விரும்பியது பற்றிச் சொல்லும் முதல் வாசகத்தின் (1அர.21,1-16) அடிப்படையில் மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார்.

அரசன் ஆகாபு, அந்த திராட்சைத் தோட்டத்திற்குப் பணம் கொடுக்க முன்வந்தும், அது, தன் மூதாதையரின் உரிமைச் சொத்து என்பதால் அதை அளிக்க மறுத்தார் நாபோத், ஆனால், ஆகாபு, தனது கொடூரமான மனைவி ஈசபேலின் ஆலோசனையின்பேரில், நாபோத், பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டார், இறுதியில், அவரின் திராட்சைத் தோட்டமும் கவர்ந்துகொள்ளப்பட்டது.

நாபோத், தன் உரிமைச் சொத்துக்கு விசுவாசமாக இருந்ததால், மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்றுரைத்த திருத்தந்தை, நாபோத்தின் கதை, கொலைச்செய்யப்பட தீர்ப்பிடப்பட்ட இயேசு, புனித ஸ்தேவான் மற்றும் அனைத்து மறைசாட்சிகளின் கதைகளை ஒத்திருக்கின்றது என்று கூறினார்.

பல நாடுகள் அல்லது அரசுகளின் தலைவர்கள் இதே முறையை இன்றும் பின்பற்றுகின்றார்கள், முதலில் ஒரு பொய்யுடன் தொடங்குகின்றது, பின்னர் அது மனிதரையும், சூழ்நிலையையும் கொலை செய்வதோடு முடிவடைகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

பலர், தீமையான பொய்ப்பிரச்சாரங்களால் அழிக்கப்படுகின்றனர் என்றும், கடந்த நூற்றாண்டில் இடம்பெற்ற சர்வாதிகாரத்தன்மைகள் இதற்கு எடுத்துக்காட்டுகள் என்றும் கூறியத் திருத்தந்தை, புனித ஸ்தேவான் ஆற்றிய நீண்ட உரையிலிருந்த உண்மைக்குச் செவிகொடுக்காமல் அவரைக் கல்லால் எறிந்து கொல்வதை விரும்பினர், இது மனிதப் பேராசையின் விளைவு என்றும் கூறினார்.  

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2018, 11:27
அனைத்தையும் படிக்கவும் >