தென் அமெரிக்கா- 108 ஆவது உலக புலம்பெயர்ந்தோர் நாள்.
மெரினா ராஜ் - வத்திக்கான்.
வருங்காலத்தை, குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோரோடு கட்டியெழுப்புதல்” என்னும் திருத்தந்தையின் கருத்திற்கேற்ப நலமான வாழ்விற்காக பலர் கொலம்பியாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர் எனவும், வெறுமனே வாழ்வதற்கல்ல மாறாக கண்ணியத்துடன் வாழவே குடிபெயர்ந்தோர் விரும்புகின்றனர் எனவும் கொலம்பியாவின் Riohacha ஆயர் பிரான்சிஸ்கோ செபல்லோஸ் அவர்கள் (Francisco Ceballos) கூறியுள்ளார்.
108வது உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் நாளை முன்னிட்டு தென் அமெரிக்காவின் Paraguachón என்னும் இடத்தில் கொலம்பியா-வெனிசுலா எல்லையைச் சேர்ந்த ஏறக்குறைய 700 பேர் பங்கேற்ற நிகழ்வில் பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார் ஆயர் செபல்லோஸ்.
தனிநபராக, சமூகங்களாக நாம் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும், திருத்தந்தையின் கருத்திற்கேற்ப எதிர்காலம், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரைக் கொண்டு வடிவமைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கை ஒளி மற்றும் உண்மையை மக்களுக்கு அளித்திருக்கின்றது என்றும் எடுத்துரைத்தார் கொலம்பியா காரித்தாஸ் இயக்குனர், அருள்பணி Rafael Castillo Torres.
ஒன்றிணைந்த பயணம் என்னும் திருஅவையின் கருத்தை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில் தென் அமெரிக்காவின் கத்தோலிக்க ஆயர்கள், காரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் உட்ப பலர் கலந்து கொண்டனர்.
கொலம்பியா- வெனிசுலா எல்லையின் 200 ஆம் ஆண்டு நிறைவின் அடையாளமாக 7 ஆண்டுகளுக்கு பின் அண்மையில் திறக்கப்பட்ட சைமன் பாலிவர் பாலம், இரு நகரங்களுக்கு இடையே ஒற்றுமை மற்றும் உடன்பிறந்த உறவின் அடையாளமாக திகழ்வதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவிசெய்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. (FIDES)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்