நேர்காணல்: இந்தியாவின் முதல் இல்லறப் புனிதர் தேவசகாயம்
மேரி தெரேசா: வத்திக்கான்
மே 15, கடந்த ஞாயிறன்று வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் அவர்கள் உட்பட பத்து அருளாளர்களை புனிதர்களாக அறிவித்தார். புனிதர் தேவசகாயம் அவர்கள், 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி, கன்னியா குமரி மாவட்டம், குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த நட்டாலம் என்ற ஊரில் பிறந்தவர். இவர், கிறிஸ்தவ நம்பிக்கைக்காக மூன்று ஆண்டுகள் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாகி, இறுதியில் 1752ம் ஆண்டு சனவரி 14ம் தேதி கொலைசெய்யப்பட்டார். இவர், இந்தியாவின் முதல் இல்லறப் புனிதர், மற்றும், தமிழகத்தின் முதல் புனிதர். இப்புனிதர்பட்ட நிகழ்வுக்கு உரோம் நகர் வந்திருந்த கோயம்புத்தூர் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்களை, வத்திக்கான் வானொலிக்கு வரவழைத்து இந்நிகழ்வு பற்றிக் கேட்டோம்.
மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மிகப்பெரும் வரலாற்று நிகழ்வு, வரும் ஜூன் 5ம் தேதி கொலைசெய்யப்பட்ட இடமான ஆரல்வாய்மொழியில், இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது. அந்நாள் திருப்பலியை இந்திய திருப்பீடத் தூதர் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி அவர்கள் தலைமை தாங்கி நடத்துகிறார். இந்நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தலத்திருஅவைத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்