பத்திரிகையாளர் அடக்கச்சடங்கில் இடம்பெற்ற வன்முறைக்கு கண்டனம்
மேரி தெரேசா: வத்திக்கான்
கடந்த வாரத்தில் கொலைசெய்யப்பட்ட மெல்கிதே கிரேக்க கத்தோலிக்கரும், அமெரிக்க-பாலஸ்தீனியருமான பத்திரிகையாளர் Shireen Abu Akleh அவர்களின் உடல், அடக்கத்திற்காகக் கொண்டுசெல்லப்பட்ட ஊர்வலத்தில் இடம்பெற்ற வன்முறைக்கு, புனித பூமி கிறிஸ்தவத் தலைவர்கள் தங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
மே 11, கடந்த புதன்கிழமையன்று Abu Akleh அவர்கள், பாலஸ்தீனாவின் மேற்கு கரையில் அமைந்துள்ள ஜெனின் புலம்பெயர்ந்தோர் முகாமை இஸ்ரேலியர்கள் நடத்திய சூறையாடல் குறித்து தகவலைச் சேகரித்துக்கொண்டிருந்தபோது அவரது தலையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததால் அவர் கொல்லப்பட்டார்.
இந்த அடக்கச்சடங்கின்போது இடம்பெற்ற கடுந்துயர நிகழ்வு குறித்து கிறிஸ்தவ சமுதாயம் மிகவும் வேதனையடைந்துள்ளது என்று கூறியுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், எருசலேமின் புனித யோசேப்பு மருத்துவமனை வளாகத்தில் Abu Akleh அவர்களின் அடக்கச்சடங்கு இடம்பெற்றபோது இவ்வன்முறை இடம்பெற்றது என்று கூறியுள்ளனர்.
காவல்துறை, திருஅவையையும், திருஅவையின் நலவாழ்வு நிறுவனம், இறந்தவரின் நினைவு என எல்லாவற்றையும் அவமதித்து, சவப்பெட்டியைத் தூக்கிச் சென்றவர்கள், ஏறத்தாழ கீழே விழுகின்ற நிலைக்கு உள்ளாக்கியது என்று கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் காவல்துறையின் ஆக்ரமிப்பு, தாறுமாறாய் வன்முறையைப் பயன்படுத்தியது, இறந்தோருக்காக கண்ணீர் சிந்தியவர்களைத் தாக்கியது, கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியது போன்ற அனைத்தும் உலகளாவிய விதிமுறைகளை கடுமையாக மீறியதாகும் எனவும், கிறிஸ்தவத் தலைவர்கள் குறை கூறியுள்ளனர்.
எருசலேம் கிரேக்க முதுபெரும்தந்தை, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, புனித பூமியிலுள்ள ஆயர்கள் மற்றும், நம்பிக்கையாளர்கள் என பலரும், இக்கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். (CNA)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்