தேடுதல்

பிலிப்பீன்சில் சாம்பல் புதன் பிலிப்பீன்சில் சாம்பல் புதன் 

தென்கிழக்கு ஆசிய ஆயர் பேரவை உக்ரைனுடன் தோழமை

தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை, உக்ரைனில் நடக்கும் போர், உலகளாவிய அமைதி மற்றும் நீதியின் மீதான அதன் தாக்கம் குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை, உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், உலகளாவிய அமைதி மற்றும் நீதியின் மீதான அதன் தாக்கம் குறித்து, ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று, மார்ச் 2, புதன்கிழமையன்று தென்கிழக்கு ஆசிய ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் பினாங்கின் ஆயரும், தென்கிழக்கு ஆசிய ஆயர் பேரவையின் தலைவருமான ஆயர் செபாஸ்டியன் பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்டுள்ள கடிதம் ஒன்றில், போர்களால் யாருக்கும் பயனில்லை என்று வலியுறுத்தியுள்ளதோடு .போரின் வரலாறும் காரணங்களும் சிக்கலானதாக இருக்கலாம், ஆனால், நீண்டகாலப் போர்களால் நாம் உட்பட யாருக்கும் பயனில்லை என்று தெரிவித்துள்ளார்.

போர் என்பது பேரழிவை மட்டுமே தருகிறது என்றும், பெரும் துன்பம் மற்றும் புலம்பெயர்தலின் தடத்தை விட்டுச்செல்கிறது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஆயர் பிரான்சிஸ் அவர்கள், எனவே, ஆசியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ தலத்திருஅவைகள் மற்றும் அதன் தலைவர்களோடும், அனைத்து நம்பிக்கை மற்றும் நல்மனம்கொண்ட மக்களுடனும் ஒன்றிணைந்து, அமைதியும் நீதியும் நிலைநிறுத்தப்படவேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று விண்ணப்பித்துள்ளார்.

பரஸ்பர மரியாதை, அனைத்து தரப்பினரிடையேயும் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது, மற்றும் நாடுகளின் ஒருமைப்பாடு ஆகியவை, நீடித்த அமைதியான வாழ்வுக்கு முக்கியமானவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆயர் பிரான்சிஸ் அவர்கள், இரஷ்யா, உக்ரைன் மற்றும் அனைத்து ஆர்வமுள்ள தரப்பினரையும் வன்முறை மற்றும் போரின் மூடத்தனத்தை நிறுத்திவிட்டு, அமைதி மற்றும் நீதியின் பாதைக்கு வருமாறு தாங்கள் அழைப்புவிடுப்பதாக அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். (Asia News)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 மார்ச் 2022, 14:27