பேரழிவு சூழ்நிலை அலட்சியத்தை ஏமன் ஆயர் ஹிண்டர் கண்டித்துள்ளார்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நடந்து வரும் ஏமன் மோதலில் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான விருப்பமின்மையாலும், சர்வதேச ஆர்வமின்மையாலும் ஏற்பட்ட போர், நோய், பஞ்சம், உள்நாட்டில் இடம்பெயர்தல் ஆகியவை ஒரு நாட்டிற்குள் பேரழிவு சூழ்நிலை ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளது என்று தென் அரேபியாவிற்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஏமனில் நடைபெற்று வரும் ஏழாண்டுகாலப் போர், ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் போராளிகளையும் கொன்று குவித்து, மனிதாபிமான பேரழிவை உருவாக்கியுள்ளது என்று கூறிய தென் அரேபியாவிற்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி, தொற்றுநோயால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உலகம், ஏமன் விடயத்தில் போதிய அளவிற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற தன் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.
Alfa & Omega என்ற வாராந்திரக் கத்தோலிக்க ஸ்பானிய இதழுக்கு அளித்த பேட்டியில் இதனை எடுத்துரைத்த அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி, ஆயர் பால் ஹிண்டர் (Paul Hinder) அவர்கள், சண்டையிடும் தரப்புகளுக்கு இடையே ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு உண்மையான விருப்பம் இல்லை என்ற தன் ஆதங்கத்தையும் பதிவு செய்தார்.
இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தென் அரேபியாவின் (AVOSA) அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாக இருக்கிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்க, மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு விருந்தளிக்கும் இராணுவ தளத்தின்மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை, கடந்த வாரத்தில் இரண்டு முறை ஏமன் கிளர்ச்சியாளர்கள், நடத்தியுள்ளனர். இத்தகைய வன்முறைச் செயல்கள் மேலும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வாளர்களும் எச்சரிதுள்ளனர்.
2014ல் வெடித்த போரின் காரணமாக ஏமன் மக்கள் தொடர்ந்து போர், நோய், பஞ்சம், உள்நாட்டு இடப்பெயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்