COMECEன் தலைவர் - கர்தினால் Jean-Claude Hollerich COMECEன் தலைவர் - கர்தினால் Jean-Claude Hollerich 

ஐரோப்பியத் தலைவர்களுக்கு கர்தினாலின் விண்ணப்பம்

உலக வெப்பமயமாதலைக் குறித்து, அறிவியல் உலகம் எச்சரித்த காலக்கெடுவைவிட துரிதமாக, 1.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் என்ற பாதாளத்தின் விளிம்பை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம் - கர்தினால் Hollerich

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்பதையும், நமது நலவாழ்வு, இந்த பூமிக்கோளத்தின் நலவாழ்வுடன் பிரிக்கமுடியாதவண்ணம் பிணைந்துள்ளது என்பதையும், கோவிட் பெருந்தொற்று நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது என்று, கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், ஐரோப்பியத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில் கூறியுள்ளார்.

அக்டோபர் 31, வருகிற ஞாயிறு முதல், நவம்பர் 12ம் தேதி முடிய ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும் COP26 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்த ஆயர் மாமன்றங்கள் ஒருங்கிணைப்பின் தலைவரான கர்தினால் Hollerich அவர்கள் அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

உலக வெப்பமயமாதலைக் குறித்து, அறிவியல் உலகம் எச்சரித்த காலக்கெடுவைவிட துரிதமாக, 1.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் என்ற பாதாளத்தின் விளிம்பை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்று, கர்தினால் Hollerich அவர்கள், இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்து நிறைந்த இந்த சமுதாய நெருக்கடியைத் தடுக்கும் கடமை, உலகின் அனைத்து நாடுகளையும் சார்ந்தது என்பதை உணர்ந்தவர்களாய், கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுமாறு, கர்தினால் Hollerich அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும் ஆபத்தை எவ்வளவு திறமையாக தடுக்கிறோம் என்பதிலும், குறிப்பாக, காலநிலை மாற்றங்களால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த மக்களுக்கு நாம் வழங்கும் நீதியிலும், நமது பதிலிறுப்பு தீர்மானிக்கப்படும் என்று, கர்தினால் Hollerich அவர்கள், தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய, மற்றும், மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள், அளவுக்கதிகமாக வளர்த்துக்கொண்டுள்ள நுகர்வுக்கலாச்சாரத்திலிருந்து விடுதலையடைந்து, தங்கள் வாழ்வுமுறையில் அடிப்படை மாற்றங்களை கொணரவேண்டும் என்று கூறியுள்ள கர்தினால் Hollerich அவர்கள், இந்த முடிவு, இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக வீணாக்கும் நம் பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதில் வெளிப்படும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

புதைப்படிவ எரிபொருள்களில் முதலீடு செய்தல், அவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை முடிவுகளிலிருந்து விலகி, மறுசுழற்சி முறைகளை வளர்த்து வாழ்வதால், நம்மை நெருங்கியிருக்கும் பேராபத்தை நாம் தடுக்கமுடியும் என்று, கர்தினால் Hollerich அவர்கள், இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுக்கடங்காமல் தொழில்மயமாக்கப்பட்டுள்ள உலகில், கட்டாயப் புலம்பெயர்வுக்கு உள்ளாக்கப்படும் பழங்குடியினர், வறியோர் ஆகியோருக்கு உரிய நிலங்களையும், அவர்களுக்கு உரிய நீதியையும் வழங்குவது, COP26 கூட்டத்தின் ஒரு முக்கிய முயற்சியாக இருக்கவேண்டும் என்று, கர்தினால் Hollerich அவர்கள், தன் மடல் வழியே விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2021, 14:13