தேடுதல்

உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். - மாற்கு 9,46 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். - மாற்கு 9,46 

பொதுக்காலம் 26ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

இயேசு கூறும் ஆலோசனைகள், நம் ஆன்ம நலனுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் என்ற கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தி சொல்லித்தரும் கசப்பான உண்மைகளைப் பயில முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 26ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

கிரேக்க நாட்டில் வாழ்ந்த விளையாட்டு வீரர் ஒருவர், பல போட்டிகளில் வெற்றிபெற்று, நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். மக்கள், அவருக்கு சிலையொன்றை செய்து, நகர சதுக்கத்தில் வைத்தனர். அந்த வீரருடன் பலமுறை போட்டியிட்டு, தோற்றுப்போன மற்றுமோர் இளைஞர், அச்சிலையைக் கண்டபோதெல்லாம், பொறாமையில் புழுங்கினார். ஓர் இரவு, ஊரெல்லாம் உறங்கியபின், அவர் அந்த சிலையை உடைத்து வீழ்த்த, நகரச் சதுக்கத்திற்கு சென்றார். இருளில், தட்டுத்தடுமாறி, சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீதேறி, அச்சிலையைச் சுற்றி கயிற்றைக் கட்டினார். பின்னர், கீழே இறங்கிவந்து, தன் வலிமை அனைத்தையும் சேர்த்து, அந்தக் கயிறை இழுத்தார். சிலை, அவர் மீது விழுந்து, அவரைக் கொன்றது.

பொறாமை என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அழிவைச் சந்தித்தனர் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. காயின், ஆபேல் காலம் முதல், மனிதர்களை வதைத்துவரும் பொறாமை என்ற நோயைக் குறித்து சிந்திக்கவும், இந்த நோயைக் குணமாக்கும் வழிகளைக் கற்றுக்கொள்ளவும், இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.

பொறாமை என்ற உணர்வின் அடித்தளமாக இருப்பது, நமக்குள் நாமே உருவாக்கிக்கொள்ளும் பாகுபாடுகள். மற்றவர்களைவிட நம்மை உயர்வாகக் கருதி, நாம் என்றும், நம்மைச் சாராதவர் என்றும் வேறுபாடுகளை உருவாக்கும்போது, பொறாமை பொங்கியெழுகிறது.

மோசேயிடமிருந்து நேரடியாக ஆசீரைப் பெறாத எல்தாது, மேதாது என்ற இருவர், இறைவாக்குரைத்தனர் என்பதைக் கேள்விப்படும் யோசுவா, அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி, மோசேயிடம் விண்ணப்பிக்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. இயேசுவைச் சாராத ஒருவர், அவரது பெயரால் பேய் ஓட்டுவதைக் கணடு, அவரைத் தடுக்கமுயன்ற, இயேசுவின் சீடர் யோவானை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.

இவ்விரு நிகழ்வுகளிலும், பொறாமையால் தூண்டப்பட்டவர்கள், இறை ஊழியர்கள் என்ற உண்மை நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. அத்துடன், இறைவாக்குரைத்தல், இறைவன் பெயரால் பேய்களை ஓட்டுதல் ஆகிய புனிதமான பணிகளிலும், பொறாமை நுழையக்கூடும் என்ற உண்மை, வேதனை தருகிறது. பாடங்களும் சொல்லித்தருகிறது.

நாம் வாழும் இன்றைய உலகில், கடவுள் பெயரால், மதங்களின் பெயரால் பொறாமைத் தீ கட்டுக்கடங்காமல் பற்றியெரிவதை, ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்துவருகிறோம். நமது பொறாமை உணர்வை குணமாக்கும் மருந்தை, மோசேயும், இயேசுவும் கூறும் பதிலுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

யோசுவாவுக்கு, மோசே, பெருந்தன்மையோடு தரும் பதில் மிக அழகானது. மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!" என்றார். (எண்ணிக்கை 11:29)

அதேவண்ணம், யோவானிடம் இயேசு கூறும் பதிலும், பரந்ததோர் உள்ளத்தை வளர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறது. அதற்கு இயேசு கூறியது; "தடுக்கவேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்" என்றார். (மாற்கு 9: 39)

புனிதப்பணியாற்றும் ஆசீர் அனைவருக்கும் கிடைத்தால் எவ்வளவோ அழகானது என்றெண்ணும் பரந்துவிரிந்த உள்ளத்தை வளர்த்துக்கொள்ளாமல், அனைத்து ஆசீரும் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று ஒருவர் எண்ணும்போது, பிரச்சனைகள் தோன்றுகின்றன. அனைத்தும் தங்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தில் செல்வங்களை குவித்துவைக்கும் செல்வர்களுக்கு, திருத்தூதர் யாக்கோபு வழங்கும் எச்சரிக்கை இன்றைய இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கிறது:

  • யாக்கோபு 5: 1-6
  • செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப்போயிற்று... உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும்.

உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.

செல்வர்களுக்கு எதிராக இத்தனை துணிவுடன் கண்டனங்களை அடுக்கிவைத்த திருத்தூதர் யாக்கோபு, கொல்லப்பட்டதில் சிறிதும் வியப்பில்லை!

புனித யாக்கோபை இவ்வளவு துணிவு கொள்ளச்செய்தது, அவர் இயேசுவின் பணிவாழ்வில் கண்ட துணிவு. இயேசுவின் துணிவு, இன்றைய நற்செய்தியில் ஒலிக்கும் கடினமான எச்சரிக்கைகளில் தெளிவாகிறது.

சிறியோருக்கு இடறலாக இருப்பவர்களின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, அவர்களை கடலில் தள்ளிவிடுவது மேல் என்றும், நம்மைப் பாவத்தில் விழச்செய்யும் உடல் உறுப்புக்களை வெட்டி எறிவது மேல் என்றும், இயேசு கூறும் ஆலோசனைகள், கேட்பதற்கு மிகக் கடினமாக உள்ளன. இந்த ஆலோசனைகள், நம் ஆன்மாவின் நலனுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் என்ற கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தி சொல்லித்தரும் கசப்பான உண்மைகளைப் பயில முயல்வோம்.

சவால்கள் நிறைந்த இயேசுவின் ஆலோசனைகளைப் புரிந்துகொள்ள, அவர் எந்தப் பின்னணியில் இவற்றைச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளை, சென்ற வார நற்செய்தியின் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். சென்ற வாரம், ஒரு குழந்தையை மையமாக்கி, இயேசு தன் சீடர்களுக்குச் சவால் விடுத்தார். இவர்களில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுங்கள், இவர்களைப்போல் மாறுங்கள் என்று கூறினார் இயேசு. ஆனால், நடைமுறையில் அவர் கண்டது வேறு. அவரது கூற்றுகளுக்கு நேர் மாறாக, குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளாமல், அவர்களை, வயதில் முதிர்ந்தவர்களின் உலகில், வலுக்கட்டாயமாக திணிப்பவர்களைக் குறித்து, இயேசு இன்றைய நற்செய்தியில் எச்சரிக்கை விடுக்கிறார். மனசாட்சியற்ற இந்த அரக்கர்களால் குழந்தைகள் சந்திக்கும் ஆபத்துக்களை நினைத்து, கொதித்தெழுகிறார்.

குழந்தைகள் மட்டும் அல்ல, குழந்தை மனம் கொண்டவர்கள், ஏழைகள், சமுதாயத்தில் சிறியவர்கள், அனைவரையும் “இச்சிறியோருள்” என்ற சொல்லில் இணைத்துவிடுகிறார் இயேசு. "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக்கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது"  (மாற்கு நற்செய்தி 9: 42) என்று சொல்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவையை பெரும் வேதனையில் ஆழ்த்திவரும் ஒரு குற்றச்சாட்டு, சிறியோருக்கும், பெண்களுக்கும் எதிராக, ஒருசில அருள்பணியாளர்களாலும், ஆயர்களாலும் இழைக்கப்பட்டுவரும் பாலியல் குற்றங்கள். இனிவரும் காலங்களில், சிறியோரும், பெண்களும், திருஅவையில், பாதுகாப்பை உணரும்வண்ணம், தகுந்த வழிமுறைகள் உருவாகவேண்டுமென்று இறைவனை வேண்டுவோம்.

சமுதாயம் என்ற உடலின் நலனைக் கெடுக்கும் நோயாக மாறுவதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அறிவரையை, இயேசு, இன்றைய நற்செய்தியில், கடினமான வழியில் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் தங்களுக்குள் மாற்றங்களை உருவாக்குவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்கவேண்டியிருக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கை, கால் இவற்றை வெட்டிப்போடுங்கள், கண்ணைப் பிடுங்கி எறியுங்கள், என்று இயேசு கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் நடந்ததாய் சொல்லப்படும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. இரயில்வேத் துறையில் பணிபுரிந்த ஒருவர், தனியே ஏதோ ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு பாம்பு அவரது கையில் கொத்திவிடுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு அது. மருத்துவமனை செல்வதற்கு நேரமோ, வாகனவசதியோ இல்லாத நிலை. வாகனத்திற்காகக் காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து இருந்தது. அவர் செய்தது என்ன? அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். தன் கையை வெட்டிக்கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவர், தன் கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், இன்னும் உயிரோடு இருக்கிறார்.

இது போன்ற பல நிகழ்வுகளை நாம் கேட்டிருப்போம். பல நேரங்களில் மருத்துவ மனைகளில், உங்களுக்கு கை வேணுமா? உயிர் வேணுமா? கால் வேணுமா? உயிர் வேணுமா? என்ற கேள்விகள் கேட்கப்படும். காயத்தால் புரையோடிப்போன கையையோ, காலையோ வெட்டி, எத்தனையோ பேருடைய உயிரை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். வேறு எந்த வழியும் இல்லை என்ற கடைசி நிலையில் எடுக்கப்படும் முடிவு அது.

உயிரா, உறுப்பா என்ற கேள்வியைச் சந்திக்கும் இறுதிநிலை, ஒரு நாளிலோ, ஓரிரவிலோ வரும் நிலை அல்ல. அந்த நிலை, வழக்கமாக, சிறுகச் சிறுகத்தான் வரும். பாம்பு கொத்தியதால், கையை வெட்டிக்கொள்வது போன்ற நிகழ்வுகள் மிக அரிதாக நடக்கும். ஆனால், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற இறுதிநிலைக்குத் தள்ளப்படுவது, அடிக்கடி நிகழ்வதுதானே. அந்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுடைய வாழ்வைப் புரட்டிப்பார்த்தால், சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு வரும் சர்க்கரை வியாதியை எண்ணிப்பார்ப்போம். அந்த வியாதி வருவதை, பல வழிகளில் நம்மால் தடுக்கமுடியும். அடுத்து, அந்தக் வியாதி உள்ளதென்று கண்டுபிடித்தவுடன், நமது உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சி, மருந்துகள் என்று, காட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், சர்க்கரை வியாதி என்ற குறையோடு பல ஆண்டுகள் வாழமுடியும். அவ்வகை கட்டுப்பாடுகள் இல்லாமல் வாழ்வோரின் கையிலோ, காலிலோ, ஒரு காயம் ஏற்பட்டால், அதுவும், அவர்களுக்கு தரப்படும் மற்றோர் எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம், வாழ்வை மாற்றிக்கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் தன்னிச்சையாக வாழும்போது, இறுதியில், மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய நிலை வரும்.

உடல்நலனைக் கெடுக்கும் பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும், என்ற அறிவுரைகள், எல்லாருக்கும் தேவையானவைதானே! இத்தகைய அறிவுரைகளைத்தான், இயேசு, இன்றைய நற்செய்தியில், கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றம் உன்னில் ஆரம்பமாகட்டும்" என்று சொன்னவர், மகாத்மா காந்தி. ஊரையும், உலகத்தையும் மாற்றுவதற்கு ஓர் ஆரம்பமாக, நம்மை மாற்றிக்கொள்வது நல்லது. அந்த மாற்றம், இன்றே ஆரம்பமானால், மிகவும் நல்லது.

இறுதியாக, ஓர் எண்ணம், ஒரு வேண்டுதல்... ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை, குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளைச் சிறப்பிக்கிறது. இந்த உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள செய்தி, "இன்னும் விரிவடைந்த 'நாம்'- என்பதை நோக்கி" (Towards An Ever Wider “We”) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தியின் துவக்கத்தில் திருத்தந்தை கூறியுள்ள சொற்களுடன் நம் சிந்தனைகளை நிறைவுசெய்வோம்:

'அனைவரும் உடன்பிறந்தோர்' (Fratelli Tutti) திருமடலில் நான் வெளியிட்ட ஒரு நம்பிக்கை என் எண்ணங்களில் இப்போது மேலோங்கியுள்ளது: "உலகமனைத்தும் சந்திக்கும் இந்த நலவாழ்வு நெருக்கடி கடந்துபோகும் வேளையில், நாம் நுகர்வுக் கலாச்சாரத்திலும், தன்னை மட்டுமே காத்துக்கொள்ளும் சுயநலத்திலும் இன்னும் அதிகமாக மூழ்கிவிடும் ஆபத்து உண்டு. இறைவனுக்கு விருப்பமானால், இனி, 'அவர்கள்' 'அவை' என்ற எண்ணங்களை விடுத்து, 'நாம்' என்ற எண்ணத்தில் சிந்திப்போமாக".

‘நான்’ என்ற சுயநல நிலையிலிருந்து வெளியேறி, ‘நாம்’ என்ற பரந்துவிரிந்த மனதை அனைவரும் பெறுவதற்கு இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2021, 14:23