கருக்கலைத்தலுக்கு மக்களின் வரிப்பணம் வீணாகிறது
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
கருக்கலைத்தலை, மனிதர்களுக்கு வழங்கப்படும் நலம் சார்ந்த பணியாக ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
கருக்கலைத்தலை, நலவாழ்வின் அடிப்படைப் பணிகளில் ஒன்றாக மாற்றி, அதற்கு, அரசின் நிதி உதவி கிடைப்பதற்கு வழிசெய்யும் வண்ணம் அமெரிக்க அரசின் காங்கிரஸ் அவை வரவு செலவு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் இவ்வாரத்தில் அரசியல் பிரதிநிதிகளின் வாதத்திற்கு முன்வைக்கப்படுவதை உணர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, இத்திட்டத்தை அரசு நிராகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் வழியே, வரி செலுத்தும் குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுவது தவறு என்றும், கருக்கலைத்தலை செய்ய மறுக்கும் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் மனசாட்சிக்கு எதிராக செல்வதற்கு இந்தத் திட்டம் வற்புறுத்துவது தவறு என்றும் ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க மக்களின் உழைப்பின் பயனாக செலுத்தப்படும் வரிகளைக் கொண்டு உருவாக்கப்படும் அரசின் நிதி, மனித குலத்திலேயே மிகவும் சக்தியற்ற நிலையில், கருவில் வளரும் குழந்தைகளைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத திட்டம் என்று ஆயர்கள் தங்கள் கண்டனத்தை பதிவுசெய்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் உருவாக்கியுள்ள இந்த விண்ணப்பத்தில் மனசாட்சியுள்ள அனைத்து கத்தோலிக்கரும் கையொப்பமிடுமாறும், கருவுற்ற குழந்தைகளைக் காக்கும் எண்ணத்தை தங்கள் நண்பர்களிடையே பரப்புமாறும் அமெரிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்