ஏழை நாடுகளுக்கு நிதியுதவியை அதிகரிக்குமாறு, இங்கிலாந்து பிரதமருக்கு எழுதச் சொல்லிக் கேட்கும் CAFOD அமைப்பு ஏழை நாடுகளுக்கு நிதியுதவியை அதிகரிக்குமாறு, இங்கிலாந்து பிரதமருக்கு எழுதச் சொல்லிக் கேட்கும் CAFOD அமைப்பு  

நிதியுதவி குறைப்பு, ஏழைமக்களின் உயிரிழப்புக்கு காரணமாகும்

உலகின் ஏழைகள் பல்வேறு துன்பங்களை அடைந்துவரும் வேளையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளை, இங்கிலாந்து அரசு குறைத்துள்ளது குறித்து கவலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இங்கிலாந்து நாடு வழங்கிவரும் வெளிநாட்டு உதவிகள் குறைக்கப்படக்கூடாது என பிறரன்பு அமைப்புகளும், மத நிறுவனங்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளபோதிலும், இங்கிலாந்து பாராளுமன்ற்ம், அண்மையில் எடுத்துள்ள முடிவு, பல ஆயிரம் ஏழைமக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் என கவலையை வெளியிட்டுள்ளது, CAFOD என்ற கத்தோலிக்க துயர் துடைப்பு நிறுவனம்.

இங்கிலாந்து நாட்டின் மொத்த ஆண்டு வருமானத்தில் 0.7 விழுக்காட்டை ஏழை நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு, இதுவரை உதவியாக வழங்கி வந்ததை, தற்போது, 0.5 விழுக்காடாக குறைக்க முன்வைக்கப்பட்ட தீர்மானம், பாராளுமன்றத்தில், 298 வாக்குகள் எதிராகவும் 333 வாக்குகள் ஆதரவாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றாலும், சுற்றுச்சூழல் அழிவாலும் உலகின் ஏழைகள் பல்வேறு துன்பங்களை அடைந்துவரும் வேளையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளை இங்கிலாந்து அரசு குறைத்துள்ளது குறித்து கவலையை வெளியிட்ட CAFOD அமைப்பின் இயக்குனர் Christine Allen அவர்கள், பொருளாதாரச் சரிவை இதற்கு காரணமாகக் காட்டும் இங்கிலாந்து பாராளுமன்றம், அதேவேளையில், நாட்டின் பாதுகாப்புச் செலவை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, குறைகூறியுள்ளார்.

உலகம் முழுவதும், ஏழைநாடுகளில், பிறரன்பு அமைப்புகள் மேற்கொண்டுவரும் பணிகள், இங்கிலாந்தின் இந்த உதவி நிதி குறைப்பால் பாதிக்கப்படும் என்ற CAF என்ற பிரான்பு அமைப்பின் முதன்மை இயக்குனர் Neil Heslop அவர்கள், இதுவரை கட்டியெழுப்பப்பட்டு வந்த பல உதவிப் பணிகள் வீழ்ச்சியடைவதுடன், பல ஏழைமக்கள் உயிரிழப்புக்கு அது காரணமாகும் என தெரிவித்தார்.

உதவிகளை சார்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள இன்றையச் சூழலில், இங்கிலாந்து பாராளுமன்றம் ஏழைநாடுகளுக்குத் தேவையான நிதியுதவிகளை குறைத்துள்ளதன் வழியாக, பல தலைமுறைகள் பாதிப்படையும் எனவும், குழந்தைகளின், குறிப்பாக பெண்குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் எனவும் கூறும் பிறரன்பு அமைப்புக்கள், ஏழைகளின் வளர்ச்சிக்கு உதவும் தங்கள் கடமையிலிருந்து, இங்கிலாந்து பாராளுமன்றம் தவறியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளன.

ஏழை நாடுகளுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை குறைக்க ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இதன் வழியாக தங்கள் கரங்களை இரத்தக்கறைப் படிந்தவைகளாக மாற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கின்றன, பிறரன்பு அமைப்புகள். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2021, 13:59