சுற்றுச்சூழல் அழிவுத் திட்டங்களுக்கு கத்தோலிக்கர் எதிர்ப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இலங்கையின் Muthurajawela நஞ்சை நிலப்பகுதியை ஆக்ரமித்து அதில் இயற்கை வாயு மின்நிலையம் ஒன்றை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கர்கள்.
சதுப்பு நிலப்பகுதி அல்லது, நஞ்சை நிலப்பகுதி என அழைக்கப்படும், இயற்கை அழகு கொழிக்கும் Muthurajawela பகுதியை கடல் மண் கொண்டு நிரப்பி, அதில் மின் ஆலையை கட்டி, கொழும்பு துறைமுக நகருக்கு மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளது இலங்கை அரசு.
ஜூலை 11ம் தேதி, ஞாயிறன்று, Bopitiyaவின் புனித நிக்கோலஸ் கோவிலிலிருந்து துவங்கி, பல கிராமங்களின் சாலைகளின் இருமருங்கிலும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் உட்பட, எண்ணற்ற கத்தோலிக்கர்கள் அட்டைகளை தாங்கிய வண்ணம் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
அமைதியான முறையில் எதிர்ப்பை வெளியிடும் வகையில் இயேசுவின் திருஉருவத்தைத் தாங்கிய வாகனப் பவனி ஒன்றை துவக்கிவைத்து உரையாற்றிய புனித நிக்கோலஸ் பங்குத்தள அருள்பணியாளர் Jayantha Nimal அவர்கள், மேலும் நூறு ஏக்கர் சதுப்பு நிலத்தை கடல் மண் கொண்டு நிரப்பும் அரசின் திட்டத்தால், வருங்காலத்தில் வெள்ளப் பெருக்குகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றார்.
வளர்ச்சி என்ற பெயரில், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் அருள்பணி நிமல்.
சுற்றுச்சூழல் என்ற கருவூலத்தை, நம் வருங்கலத் தலைமுறைக்கென, நாம், பாதுகாத்து வழங்கவேண்டும் என்பதை, நம் கிறிஸ்தவ விசுவாசம் எடுத்துரைக்கிறது என, மேலும் கூறினார், அருள்பணி நிமல்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்