பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் 

பாகிஸ்தானில் கல்விப்பணியில் கத்தோலிக்க அமைப்புகள்

ஏழைகளுக்கு உதவுவதன் வழியாக, அவர்களும் தங்களிடம் இருப்பதை ஏழைகளுடன் பகிரவேண்டும் என்ற உணர்வை ஊட்டிவரும் கத்தோலிக்க அமைப்புக்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தான் கராச்சியின் கத்தோலிக்க Focolare அமைப்பு, காரித்தாஸ் நிறுவனம், மற்றும் உயர்மறைமாவட்ட உதவி அமைப்புக்கள் இணைந்து, ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், எழுது கருவிகள், உணவு ஆகியவற்றை வழங்கிவருகின்றன.

சமுதாய, மற்றும் பொருளாதார ஏணியில் ஏறுவதற்கு, கல்வியே முக்கியம் என்பதை உணர்ந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாக, அதனைத் தொடரமுடியாமல் இருக்கும் சிறார்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க, பாகிஸ்தானின் கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்வந்துள்ளன.

மதவேறுபாடின்றி, ஏழை மாணவர்கள் அனைவருக்கும், கல்விக்கண்ணைத் திறக்க உதவுவதன் வழியாக, பொருளாதார வளர்ச்சிக்கும் உதவமுடியும் என்று கூறியுள்ள, Focolare குழுவின் தலைவர் Fabian Clive அவர்கள், குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து, அவர்கள் கல்வியைத்தொடர உதவும் இத்தகைய செயல்பாடுகள், வருங்காலத்திலும் தொடரும் என்று கூறினார்.

கல்வி பயில்வதில் ஆர்வமுடன் இருக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதன் வழியாக, குடும்பங்களின் மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவமுடியும் என்பதால், Focolare இயக்கத்துடன் இணந்து இத்தகைய பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்தார், கராச்சி காரித்தாஸ் அமைப்பின் உயர்  செயலர் Mansha Noor.

ஏழை மாணவர்களுக்கு உணவு, மற்றும் கல்விக்குத் தேவையான பொருட்களை வழங்கும் அதேவைளையில், அவர்களும், வாழ்வில் முன்னேறியபிறகு, தங்களிடம் இருப்பதை ஏழைகளுடன் பகிரவேண்டும் என்ற உணர்வையும் ஊட்டிவருவதாக, இந்த கத்தோலிக்க அமைப்புகள் தெரிவித்துள்ளன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2021, 14:59