கோவிட் பெருந்தொற்றினால் மரணமடைந்த ஆயர் லாக்ரா கோவிட் பெருந்தொற்றினால் மரணமடைந்த ஆயர் லாக்ரா  

கோவிட் பெருந்தொற்றினால் மரணமடைந்த 4வது ஆயர்

சோட்டா நாக்பூர் பகுதியில் வாழும் பழங்குடியினருக்கென அயராது உழைத்த ஆயர் லாக்ரா அவர்களின் மறைவு, ஈடுசெய்ய இயலாத பெரும் இழப்பு - கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் கும்லா (Gumla) மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த பால் அலாய்ஸ் லாக்ரா (Paul Alois Lakra) அவர்கள், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக, ஜூன் 15, இச்செவ்வாயன்று, இறையடி சேர்ந்தார்.

சோட்டா நாக்பூர் பகுதியில் வாழும் பழங்குடியினருக்கென அயராது உழைத்த ஆயர் லாக்ரா அவர்களின் மறைவு ஈடுசெய்ய இயலாத பெரும் இழப்பு என்று, கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

ஆயர் லாக்ரா அவர்களின் அடக்கத் திருப்பலியை, இராஞ்சி பேராயர் ஃபீலிக்ஸ் டோப்போ அவர்கள், கும்லா பேராலயத்தில், ஜூன் 16, இப்புதனன்று தலைமையேற்று நடத்தினார். 

2006ம் ஆண்டு முதல், கும்லாவின் ஆயராகப் பணியாற்றிவந்த, 65 வயது நிறைந்த ஆயர் லாக்ரா அவர்கள், இந்தியாவில், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக இறந்த நான்காவது ஆயர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இவருக்கு முன்னதாக, புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் அந்தனி அனந்தராயர், சாகர் மறைமாவட்டத்தின் முன்னாள் சீரோ மலபார் ஆயர் ஜோசப் நீலங்காவில், மற்றும் மத்திய பிரதேசத்தின் ஜாபுவா மறைமாவட்ட ஆயர் பேசில் பூரியா ஆகியோர், கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கோவிட் பெருந்தொற்றினால் நோயுற்று, இதுவரை, இந்திய தலத்திருஅவையில், 283 அருள்பணியாளர்களும், 252 அருள் சகோதரிகளும் இறையடி சேர்ந்துள்ளனர் என்று, Indian Currents இதழில் பணியாற்றும் அருள்பணி சுரேஷ் மாத்யூ அவர்கள் கூறியுள்ளார்.(AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2021, 15:08