இந்தியாவிற்கு மலேசியத் திருஅவை உதவி
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் வருகின்ற இவ்வேளையில், அந்நாட்டு மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறும், நிதியுதவிகளை வழங்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார், மலேசியாவின் Kuching உயர்மறைமாவட்ட பேராயர் Simon Poh.
மே 16, இஞ்ஞாயிறன்று, புனித யோசேப்பு பேராலயத்தில், இணையம்வழி திருப்பலி நிறைவேற்றிய பேராயர் Simon Poh அவர்கள், மலேசியாவின் Sarawak மாநிலம், மற்றும், அந்நாட்டின் ஏனைய பகுதிகளின் கத்தோலிக்கர்கள், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு நிதியுதவி செய்யுமாறு விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிதி சேகரிப்பு, மே 22, வருகிற சனிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என்று, Kuching உயர்மறைமாவட்டத்தின் இணைய பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள, பேராயர் Simon Poh அவர்கள், இந்தியாவில் நிலவும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு நம்மிடம் வளங்கள் இல்லையென்றாலும், நமது ஏழ்மையிலும், அன்பு, மற்றும் நம்பிக்கையை வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால், கடந்த ஐந்து வாரங்களில், ஒரு நாளைக்கு 4 பேர் என, குறைந்தது 160, மறைமாவட்ட, மற்றும், துறவு சபைகளின் அருள்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று, Indian Currents இதழின் ஆசிரியரான கப்புச்சின் அருள்பணி சுரேஷ் மத்தேயு அவர்கள் கூறியுள்ளார்.
இவ்வாண்டு ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து, மே 17ம் தேதி வரை உயிரிழந்துள்ள அருள்பணியாளர்கள் பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ள அருள்பணி மத்தேயு அவர்கள், உயிரிழந்துள்ள அருள்பணியாளர்களுள் 60க்கும் மேற்பட்டோர் துறவு சபைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்