புனிதராக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர் தேவசகாயம் புனிதராக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர் தேவசகாயம்  

பல்வேறு மதத்தவருக்கும் மகிழ்வு தரும் புனிதர் பட்ட செய்தி

இந்தியாவில் இதுவரை புனிதர்களாக உயர்த்தப்பட்டோரில், அருளாளர் தேவசகாயம் அவர்களே, முதல் பொதுநிலையினர். இவர் ஏற்கனவே, மக்கள் நடுவே ஒரு புனிதராகக் கொண்டாடப்பட்டு வருகிறார் - கோட்டாறு ஆயர், நசரேன் சூசை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மறைசாட்சியாக உயிர் நீத்த தேவசகாயம் அவர்கள் புனிதராக உயர்த்தப்படவிருக்கும் செய்தி, கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல், பல்வேறு மதத்தவருக்கும் மகிழ்வு தரும் செய்தியாக அமைந்துள்ளது என்று, கோட்டாறு மறைமாவட்ட ஆயர், நசரேன் சூசை அவர்கள் கூறியுள்ளார்.

புனிதராகும் முதல் பொதுநிலையினர்

மே 3, இத்திங்களன்று, திருப்பீடத்தில் நடைபெற்ற கர்தினால்கள் அவை கூட்டத்தில், அருளாளர் தேவசகாயம் உட்பட, ஏழு பேர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு வழங்கப்பட்ட ஒப்புதலைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட, ஆயர் நசரேன் சூசை அவர்கள், அருளாளர் தேவசகாயம் அவர்கள், அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் ஒரு தூதராக விளங்குகிறார் என்று கூறினார்.

இந்தியாவில் இதுவரை புனிதர்களாக உயர்த்தப்பட்டோரில், அருளாளர் தேவசகாயம் அவர்களே, முதல் பொதுநிலையினர் என்பதைச் சுட்டிக்காட்டிய, ஆயர் நசரேன் சூசை அவர்கள், இவர் ஏற்கனவே, மக்கள் நடுவே ஒரு புனிதராகக் கொண்டாடப்பட்டாலும், இவர், திருஅவையால் அதிகாரப்பூர்வமாக புனிதர் என்று அறிவிக்கப்படும் நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பணிக்குழுவில் உழைத்துவந்த அருள்பணி தேவசகாய ராஜ் அவர்கள், பொதுநிலையினரான தேவசகாயம் அவர்கள் புனிதராக உயர்த்தப்படும் நிகழ்வு, ஒடிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக கொல்லப்ப்பட்டோரின் மறைசாட்சிய மரணமும் திருஅவையால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அம்மாநில திருஅவை உழைப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று கூறினார்.

அருளாளர் தேவசகாயம் – வாழ்க்கை குறிப்புகள்

1712ம் ஆண்டு முதல் 1752ம் ஆண்டு வரை வாழ்ந்த இறையடியார் தேவசகாயம் அவர்கள், திருவிதாங்கூர் பேரரசர் மார்த்தாண்ட வர்மாவின் நீதிமன்றத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். டச்சு கப்பற்படைத் தளபதி Eustachius De Lannoy என்பவரின் தூண்டுதலால், இந்து மதத்திலிருந்து, கத்தோலிக்க மதத்திற்கு மாறிய தேவசகாயம் அவர்கள், தன்னைப்போலவே பிறரும், கத்தோலிக்கத்தைத் தழுவி, திருமுழுக்குப் பெறுவதற்குத் தூண்டுதலாக விளங்கினார்.

இயேசு சபை அருள்பணியாளர் Bouttari Italus அவர்களால் திருமுழுக்கு பெற்ற தேவசகாயம் அவர்கள், தன் இயற்பெயரான நீலகண்ட பிள்ளை என்பதை மாற்றி, இறைவனின் உதவி என்று பொருள்படும், ‘இலாசர்’ என்ற பெயரை ஏற்றார். இறைவனின் உதவி என்பதைக் கூறும், 'தேவசகாயம்' என்ற பெயராலேயே இவர் அதிகமாக அறியப்படுகிறார். இவரது மனைவியார், பார்கவி அம்மாள் அவர்களும், திமுழுக்கு பெற்று, 'தெரேசா' என்று பொருள்படும், 'ஞானப்பூ அம்மாள்' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

தேவசகாயம் அவர்கள், கிறிஸ்தவரான பின்னர் வேறுபாடின்றி எல்லாச் சாதியினரோடும், சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரோடும் சரிசமமாகப் பழகியதால், பிராமணர்கள் உட்பட உயர் சாதியினரின் வெறுப்பைப் பெற்றார். அரசருக்கும் இந்து தெய்வங்களுக்கும் இவர் அவமரியாதை செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டார்.

இதனால், 1749ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திருவிதாங்கூர் மன்னரின் ஆணைப்படி, கைது செய்யப்பட்டு, பல கொடிய சித்ரவதைகளுக்கு உள்ளாகி, 1752ம் ஆண்டு சனவரி 14, அல்லது, 15ம் தேதியன்று, படைவீரர்களால், 5 கனத்த ஈயக் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை, கோட்டாறு மறைமாவட்டப் பேராலயமான புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் உள்ளது.

இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சியான இறையடியார் தேவசகாயம் அவர்கள், இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாள்முதல், இவரது கல்லறையை, மதம், இனம், மொழி என்ற பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2021, 16:05