நேர்காணல்: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புனித யோசேப்பு பக்தி
மேரி தெரேசா: வத்திக்கான்
மார்ச் 19, இவ்வெள்ளி, புனித யோசேப்பு திருநாள். திருக்குடும்பத்தின் பாதுகாவலராகிய இப்புனிதரை, திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, Quemadmodum Deus என்ற திருமடல் வழியாக, அகில உலக திருஅவையின் பாதுகாவலராக, அறிவித்தார். இந்த அறிவிப்பின் 150ம் ஆண்டின் நிறைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, “Patris corde” அதாவது, “ஒரு தந்தையின் இதயத்தோடு” என்ற தலைப்பில் திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டு, புனித யோசேப்பு யூபிலி ஆண்டை அறிவித்தார். தற்போது சிறப்பிக்கப்பட்டுவரும் இந்த யூபிலி ஆண்டு, 2021ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதியன்று நிறைவடைகிறது. 2021ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, தனது தலைமைப்பணியின் எட்டாவது ஆண்டை நிறைவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டை, இந்த எட்டாவது ஆண்டில் வெளியிடுவதாகவும் “ஒரு தந்தையின் இதயத்தோடு” என்ற திருத்தூது மடலில் குறிப்பிட்டுள்ளார். புனித யோசேப்பு ஆண்டை அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப்பு மீது தனக்குள்ள தனிப்பட்ட பக்தியை பல்வேறு நிகழ்வுகளில் கூறியிருக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதிதான், திருஅவையின் தலைமைப்பணியை ஆரம்பித்தார். இயேசு சபை அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப்பிடம் கொண்டிருக்கும் ஆழமான உறவு பற்றி, இன்று நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அருள்பணி சேவியர் ஜெயராஜ் அவர்கள், கொல்கத்தா இயேசு சபை மாநிலத்தைச் சார்ந்தவர். இவர், தற்போது உரோம், உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில், சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி செயலகத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்