கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டியெழுப்பும் தம்பதியர் கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டியெழுப்பும் தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம் : மறையுடலைக் கட்டியெழுப்பும் தம்பதியர்

'மகிழ்வும் எதிர்நோக்கும்' (Gaudium et spes) என்ற அருள்பணி கொள்கை விளக்கத்தின் வழியே, 'திருமணம் மற்றும் குடும்பத்தின் மாண்பை மேன்மைப்படுத்துவதில்' 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் அக்கறை காட்டியது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 3ம் பிரிவில், திருமணத்தையும், குடும்பத்தையும் குறித்து, விவிலியத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, முதல் பகுதியில் (58-66), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவுசெய்துள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்தப் பகுதியில், குடும்பத்தைக் குறித்து 2ம் வத்திக்கான் பொதுச்சங்கமும், திருத்தந்தையர் ஒருசிலரும் கூறும் கருத்துக்களை சுருக்கமாக வழங்கியுள்ளார்.

2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் குடும்ப வாழ்வில் அக்கறை கொண்டிருந்தது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் உருவாக்கிய 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 67ம் பத்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

"'மகிழ்வும் எதிர்நோக்கும்' (Gaudium et spes) என்ற அருள்பணி கொள்கை விளக்கத்தின் வழியே, 'திருமணம் மற்றும் குடும்பத்தின் மாண்பை மேன்மைப்படுத்துவதில்' 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் அக்கறை காட்டியது (காண்க. எண்கள் 47-52). திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு, அன்பு என்ற அடித்தளத்தைக் கொண்டது (48). கணவன்-மனைவி இடையே நிலவும் அன்பு, இறைத்திட்டத்திற்கு ஏற்ப, ஒருவருக்கொருவர் தங்களையே கொடையாக வழங்குவதில் அடங்கியுள்ளது. திருமணம் என்ற அருளடையாளத்தின் வழியே, கிறிஸ்து, தம்பதியருடன் தங்கியிருக்கிறார். அவர், மனுவுருவெடுத்ததன் வழியே, மனித அன்பை தூய்மையாக்கி, அதை, நிறைவுக்குக் கொணர்கிறார். இந்த அன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு, பிறரன்பு ஆகியவற்றால் நிறைந்த தம்பதியரின் வாழ்வை ஊடுருவிச் செல்கிறது. இவ்வகையில், கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டியெழுப்புவதற்கு, தம்பதியர் அழைக்கப்பட்டுள்ளனர்." (அன்பின் மகிழ்வு 67)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2021, 14:26