திருமண அருளடையாளத்தில் இணைக்கப்படும் ஆண்-பெண் உறவு திருமண அருளடையாளத்தில் இணைக்கப்படும் ஆண்-பெண் உறவு 

மகிழ்வின் மந்திரம் : ஆண்-பெண் உறவு, 'நுகம்'அல்ல, 'கொடை'

"கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” (மத். 19:6) என்று இயேசு கூறினார். பிரிக்கமுடியாத அந்த உறவை, மனிதகுலத்தின் மீது சுமத்தப்பட்ட ஒரு 'நுகமாக' காண்பதற்குப் பதில், ஒரு 'கொடையாக' நாம் காணவேண்டும்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், திருமணம், மற்றும் குடும்பம் ஆகியவற்றைக் குறித்து, திருஅவை சொல்லித்தரும் படிப்பினைகளை, “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” என்ற பிரிவில் திருத்தந்தை தொகுத்து வழங்குகிறார். இப்பிரிவின் 62ம் பத்தியில், ஆண்-பெண் உறவு, இறைவன் வகுத்த திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் என்பதை குறிப்பிட்டுள்ளார்:

ஆண்-பெண் இருவருக்குமிடையே உருவாகும் பிரிக்கமுடியாத உறவு, இறைவன் வகுத்த முதல் திட்டங்களில் ஒன்று என்பதை இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உறவைப் பிரிக்க நினைத்த பரிசேயரிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை" (மத். 19:8) என்று இயேசு கூறியுள்ளார். திருமண உறவு பிரிக்கமுடியாதது என்பதை உணர்த்த, "கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” (மத். 19:6) என்று இயேசு கூறினார். பிரிக்கமுடியாத அந்த உறவை, மனிதகுலத்தின் மீது சுமத்தப்பட்ட ஒரு 'நுகமாக' காண்பதற்குப் பதில், ஒரு 'கொடையாக' நாம் காணவேண்டும். மனித வாழ்வுப் பயணத்தில், கடவுளின் அளவற்ற அன்பு துணையாக வருகிறது. இறைவன் வகுத்த முதல் திட்டத்தின் (காண்க. மத். 19:8) முழுமையான வெளிப்பாடே திருமணத்தின் பொருள் என்று இயேசு உணர்த்தியதை, நற்செய்தி நமக்கு வழங்குகிறது. (அன்பின் மகிழ்வு 62)

"போவதற்கு ஓரிடம் இருந்தால், அதுவே இல்லம். அன்புகூர்வதற்கு ஒருவர் இருந்தால், அதுவே குடும்பம். இவ்விரண்டையும் பெற்றிருப்பது பெரும் ஆசீர்வாதம்" என்ற கூற்று, பாரம்பரியமாக நம்மை வந்தடைந்துள்ள பொன்மொழி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2021, 14:56