ஐக்கிய அமீரகம் நடத்திய மெய்நிகர் கூட்டத்தில், WCC செயலரும் ஏனையோரும்... ஐக்கிய அமீரகம் நடத்திய மெய்நிகர் கூட்டத்தில், WCC செயலரும் ஏனையோரும்... 

'மனித உடன்பிறந்த நிலை' மெய்நிகர் கூட்டத்தில், WCC செயலர்

நாம் எழுப்பியுள்ள சுவர்களைத் தகர்க்கவும், உரையாடல்களை மேற்கொள்ளவும், 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்' நமக்கு வழங்கியிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம் - உலக கிறிஸ்தவ அவையின் தலைமைச் செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் எழுப்பியுள்ள சுவர்களைத் தகர்க்கவும், பல்சமய மற்றும் பன்முகக் கலாச்சார உரையாடல்களை மேற்கொள்ளவும், 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்' நமக்கு வழங்கியிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம் என்று WCC எனப்படும் உலக கிறிஸ்தவ அவையின் தலைமைச் செயலர், முனைவர் Ioan Sauca அவர்கள் கூறியுள்ளார்.

பிப்ரவரி 4, இவ்வியாழனன்று, 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்' முதல்முறையாக சிறப்பிக்கப்பட்ட வேளையில், ஐக்கிய அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்து வாழ்தல் துறை நடத்திய ஒரு மெய் நிகர் கருத்தரங்கில், Sauca அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

"மேன்மையான எதிர்காலத்தை அடைவதற்கு மனித உடன்பிறந்த நிலையுடன் இணைந்து உழைக்க..." என்ற தலைப்பில் ஐக்கிய அமீரகம் நடத்திய இந்த மெய்நிகர் கூட்டத்தில், பல்வேறு உலகத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இனவெறி இன்று உலகெங்கும் மிக அதிக அளவில் பரவியுள்ளது என்றும், இந்தப் பிரச்சனை நம்மிடையே உள்ளது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதே, இந்த நோயைத் தீர்க்க, நாம் எடுக்கவேண்டிய முதல் முயற்சி என்பதை, Sauca அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஐ.நா.நிறுவனத்தின் பொது அவை, 'மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாளை' உருவாக்கியுள்ளதன் வழியே, மனித உடன்பிறந்த நிலை என்ற உணர்வு, உலகமனைத்திற்கும் தேவையான ஒரு பண்பு என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது என்று கூறிய உலக கிறிஸ்தவ அவையின் தலைமைச் செயலர், Sauca அவர்கள், ஐ.நா. அவைக்கு தன் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2021, 16:05