இயேசு தொழுநோயாளர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார்.  மாற்கு 1:41 இயேசு தொழுநோயாளர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார். மாற்கு 1:41 

பொதுக்காலம் 6ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

பிப்ரவரி 11ம் தேதி நோயாளரின் உலக நாளையும், பிப்ரவரி 14 இஞ்ஞாயிறன்று காதலர் நாளையும் சிறப்பிக்கும் நாம், உண்மையான அன்பின் பொருளைப் புரிந்துகொள்ள இறைவனிடம் மன்றாடுவோம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 6ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், தன் தலைமைப்பணியின் இறுதி ஆண்டுகளில், பார்கின்சன்ஸ் (Parkinson’s) எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோயால் துன்புற்றார். தான் ஒரு நோயாளர் என்பதை அவர் உணர்ந்ததும், பல்வேறு நோய்களால் துன்புறும் கோடான கோடி மக்களுடன், தன்னை இணைத்துக்கொண்டார். நோயுற்றோரை மையப்படுத்தி, 1992ம் ஆண்டு, நோயாளரின் உலக நாளை, அவர் உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று, இந்த உலகநாள் சிறப்பிக்கப்படுகிறது. பிப்ரவரி 11, கடந்த வியாழனன்று, 29வது முறையாக, நோயாளரின் உலக நாளை நாம் சிறப்பித்தோம். இந்த உலக நாளைத் தொடர்ந்துவரும் இஞ்ஞாயிறன்று, மீண்டும் ஒருமுறை, நோயாளரை, குறிப்பாக, தொழுநோயாளரைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்று, பிப்ரவரி 14ம் தேதியன்று, உலகின் பல நாடுகளில், 'Valentine’s Day', அதாவது, 'காதலர் தினம்' என்ற பெயரில், கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வேளையில், 'நோயாளரின் உலக நாளை'ப்பற்றி சிந்திக்கவேண்டுமா என்ற தயக்கம் நமக்குள் எழலாம். இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும், உடல் நலத்தில் மட்டுமல்ல, நோயிலும் இணைந்திருப்பதுதான், உண்மையான அன்பும், காதலும். குறிப்பாக, கோவிட்-19 நோயின் பிடியிலிருந்து மீண்டுவர இயலாமல் தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு, நம் அன்பை, காதலை வெளிப்படுத்தும் முயற்சிகளில் இந்த நாளை நாம் கழிப்பதே பொருத்தமானது. ஆனால், வர்த்தக உலகம் விளம்பரப்படுத்தும் 'காதலர் தினம்', துன்பத்தை, நோயைப் பற்றிப் பேசாது.

அன்பு, காதல், பாசம், பரிவு, நட்பு ஆகிய உன்னதமான மனித உணர்வுகளைக் கொண்டாட, காதலர் தினம், அன்னை தினம், தந்தை தினம், நட்பு தினம் என்ற நாள்களை மனித குடும்பம் உருவாக்கியது. ஆனால், இந்த நாள்களை வியாபாரமாக்கிவிட்ட வர்த்தக உலகம், இந்த அடிப்படைக் காரணங்கள் மறைந்துபோகும் அளவுக்கு, இந்நாள்களை, வாழ்த்து மடல்கள், மலர்கொத்துகள், பரிசுப்பொருள்கள், விருந்துகள் என்ற வெளி அடையாளங்களால் நிறைத்துவிட்டது. வெளிப்புற அடையாளங்கள் இல்லையேல், நம் உண்மையான உள்ளுணர்வுகளுக்கு பொருள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, வர்த்தக உலகம், இந்த நாள்களை, வியாபாரக் கொண்டாட்டங்களாக மாற்றிவிட்டது.

நல்லவேளை, வர்த்தக உலகின் பார்வை, நோயாளரின் உலக நாள் மீது பதியவில்லை. பதியவும் வாய்ப்பில்லை. ஏனெனில், நோயையோ, நோயாளரையோ, வர்த்தகப் பொருள்களாக விற்கமுடியாது என்பதால், இந்நாள், வர்த்தகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. வர்த்தகர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் 'நோயாளரின் உலக நாள்' என்ற எண்ணம், சில சங்கடங்களை உருவாக்கலாம். நோய் என்றதும், எதிர்மறையான எண்ணங்கள் பெருமளவு நம் மனதை நிறைப்பதால், இந்த சங்கடங்கள் தோன்றுகின்றன.

நோயை நாம் கொண்டாடவில்லை, மாறாக, நோயுற்றோர் காட்டும் நம்பிக்கை, துணிவு, ஆகியவற்றையும், நோயுற்றோர் மீது, மற்றவர் காட்டும் அக்கறை, பரிவு ஆகியவற்றையும், நாம் கொண்டாடுகிறோம்.

கடந்த ஆண்டின் துவக்கம் முதல், இன்று வரை, ஒவ்வொரு நாளும், நம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இருந்துவருவது, கோவிட்-19 நோய்கிருமி. எனவே, ஏனைய ஆண்டுகளைவிட, இவ்வாண்டு, நோயாளரின் உலக நாள், கூடுதலான முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில், நோயுற்றோரை வாழவைக்க, மருத்துவப்பணியாளர்கள், இரவு பகலாக மேற்கொண்டு வரும் முயற்சிகள், கட்டாயம் கொண்டாடப்பட வேண்டியவை.

நோயுறுதல், நலமடைதல் என்ற அனுபவங்களிலிருந்து நமக்குத் தேவையான, தெளிவானப் பாடங்களைப் பயில, தொடர்ந்து, மூன்றாவது வாரமாக, நோயுற்றோரை இயேசு குணமாக்கும் மற்றுமொரு நிகழ்வு, இந்த ஞாயிறன்றும் நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளது.

நலம் பெறுவதற்கு, மருத்துவ உதவிகள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒருவர் நலமடைவதற்குத் தேவையான முதல் படி, தான் நலமடைவோம் என்று, அவர் உள்மனதில் எழும் நம்பிக்கை. இந்தக் கருத்தை சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். நமது நம்பிக்கையின் அடித்தளமாக, இறைவனைக் கொண்டிருந்தால், குணமடைவது எளிதாகும் என்பதை, ஒரு மருத்துவரே தெளிவாகக் கூறியுள்ளார்.

ஹென்றி மிச்செல் (Henry Mitchell) என்ற பேராசிரியரின் மனைவி, கடுமையான ஒரு நோயிலிருந்து குணமடைந்தார். குணமளித்த மருத்துவருக்கு அவர் நன்றி சொன்னபோது, அந்த மருத்துவர் தந்த பதில், பேராசிரியரை வியப்புறச் செய்தது. மருத்துவர் சொன்னது இதுதான்: "முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்து, உங்கள் மனைவிக்காகச் செபித்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் மனைவி குணமடைந்ததில் என் பங்கு மிகக் குறைவே" என்று மருத்துவர் சொன்னதும், அவர், அதிக அளவு தாழ்ச்சியுடன் பேசுவதாக, பேராசிரியர் மிச்செல், அவரிடம் சொன்னார். மருத்துவரோ, மறுமொழியாக, "நான் சொல்வதை நீங்கள் நம்பலாம், நம்பாமலும் போகலாம். ஆனால், இதுதான் உண்மை. மருத்துவர்களாகிய நாங்கள் யாரையும் குணப்படுத்துவது கிடையாது. குணமடைவதற்குத் தடையாக உங்களுக்குள் இருக்கும் கிருமிகளை நீக்குவது ஒன்றையே, நாங்கள் திறம்படச் செய்கிறோம். மற்றபடி, நீங்கள் குணமடைவது, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை" என்று கூறினார்.

ஒருவர் நலம் அடைவதற்கு, முதலில், இறைவனின் அருள், இரண்டாவது, நோயாளியிடமும், அவரைச் சுற்றியிருப்போரிடமும் உருவாகும் நம்பிக்கை, மூன்றாவது, மருத்துவரின் திறன் என்ற இந்த வரிசையில், நம் சிந்தனைகள் அமையவேண்டும்.

நோயாளரின் உலக நாளை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் நாம் சிறப்பித்த மற்றொரு முக்கியமான நாளும் நினைவுக்கு வருகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி, அல்லது, அதற்கு அருகில் வரும் ஞாயிறன்று, தொழுநோயாளரின் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 31, ஞாயிறன்று, நாம், தொழுநோயாளரின் உலக நாளை, 68வது முறையாக கடைபிடித்தோம். நோயுற்றோரைப் பற்றி, சிறப்பாக தொழுநோயுற்றோரைப் பற்றி சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் மீண்டும் ஒருமுறை நமக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன.

  • இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகள் இதோ:
  • மாற்கு நற்செய்தி 1: 40-42
  • ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இப்போது நாம் கேட்ட இப்பகுதியை, “ஆண்டவர் வழங்கும் நற்செய்தி” என்று, உரத்தக் குரலில், அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நற்செய்தியாக ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற நிகழ்வு, நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. இந்த நிகழ்வைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும், நல்ல செய்திதான். அந்த சொற்களைப் பற்றி நாம் முதலில் சிந்திப்பது நல்லது. இன்றைய நற்செய்தியில், தொழுநோயாளரைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், மரியாதை கலந்த சொற்களாக ஒலிக்கின்றன. இந்த அழகிய மாற்றம், கடந்த சில ஆண்டுகளாக, நம் சமுதாயத்தில் உருவான மனமாற்றம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன், நாம் பயன்படுத்திய விவிலியத்தில், தொழுநோயாளருக்குச் சரியான மரியாதை வழங்கப்படவில்லை. பழைய விவிலியப் பதிப்பில் தொழுநோயாளியைச் சுட்டிக்காட்ட, ‘அவன்’, என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய விவிலியப் பதிப்பில், தொழுநோயாளரை, ‘அவர்’, என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். தொழுநோயாளரை, ஒரு மனிதராக மதித்து, அவருக்குரிய மரியாதையை வழங்குவது, நாம் அண்மைய ஆண்டுகளில் பின்பற்றும் அழகான முன்னேற்றம்.

தொழுநோயாளர் என்ற வார்த்தையைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். 1986க்கும் முந்தைய விவிலியப் பதிப்புக்களில், ‘தொழுநோயாளர்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘குஷ்டரோகி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம். ஆங்கிலத்தில், leper என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

ஒருவரை, ‘குஷ்டரோகி’ என்றழைப்பதற்கும், ‘தொழுநோயாளர்’ என்றழைப்பதற்கும், வேறுபாடுகள் உள்ளன. Leper என்றழைப்பதற்கும், leprosy patient என்றழைப்பதற்கும், வேறுபாடுகள் உள்ளன. வெறும் சொற்களில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல. மாறாக, அவர்களைக் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை, அச்சொற்கள் வெளிப்படுத்துகின்றன. இப்போது, ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியானச் சொற்களைப் பயன்படுத்தும் அளவு நாம் பக்குவமடைந்துள்ளோம்.

சாதிய மடமை என்ற நோயால் துன்புறும் இந்திய சமுதாயத்தில், ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களுக்கு, பிறப்பிலேயே முத்திரை குத்திவிடுகிறோம். இந்தியாவின் சாபக்கேடாக விளங்கும் இந்தச் சமுதாயக் குற்றத்திற்கு, இந்நேரத்தில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.

தொழுநோய் என்ற முத்திரை குத்தப்பட்டவர்கள் அடைந்த கொடுமைகளை, இன்றைய முதல் வாசகம் நம் கவனத்திற்கு கொணர்கிறது. - லேவியர் நூல் 13: 1-2, 44-46. இஸ்ரயேல் மக்கள் தொழுநோயாளிகளை நடத்திய விதம் மிகக் கொடுமையானது. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்க வேண்டும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருந்தால், ஒரு மணியை அடித்தவாறு வரவேண்டும். இந்த மணிசப்தம் கேட்டதும், எல்லாரும் விலகிவிடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்களும் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி, கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.

இஸ்ரயேல் சமுதாயத்திலும், இன்னும், உலகின் பல நாடுகளிலும், தொழுநோயாளருக்கு நிகழ்ந்த, அல்லது, இன்றும் நிகழ்ந்துவரும், இதே கொடுமைகள், கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம். இந்த நோயுற்றவர்கள், உடலளவில் துன்புற்றதைவிட, அவர்கள், குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, தனிமையில் மரணத்தைச் சந்தித்தது, இறந்த அவர்களது உடல்கள் தகுந்த மரியாதையின்றி நடத்தப்பட்டது என்று, அனைத்து நிலைகளிலும், இந்நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் சித்ரவதைகளை அடைந்தனர்.

இந்தப் பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி நிகழ்வைக் கற்பனை செய்து பார்க்கவேண்டும். இயேசுவைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது. அந்நேரத்தில், அங்கு வந்த தொழுநோயாளியின் மனதில், பெரும் போராட்டம் நிகழ்ந்திருக்கும். அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு உள்ளாக நேரிடும். அந்தக் கோபம், வெறியாக மாறினால், கல்லால் எறியப்பட்டு, கொல்லப்படலாம். இதெல்லாம் தெரிந்திருந்தும், அந்தத் தொழுநோயாளி, இயேசுவை அணுகிச்சென்றார். அந்த நம்பிக்கையே, அவர் குணமடைந்ததற்கு முதல் படியாக அமைந்தது.

இயேசு, தூரத்தில் நின்றபடி, அவரை குணமாக்கியிருக்கலாம். ஆனால், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி தொழுநோயாளரைத் தொட்டார். இயேசு இவ்வாறு செய்தது, சுற்றி இருந்தவர்களை, பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, அவர்களும் நலம் பெறவேண்டும் என்பதே, அவர் எண்ணம். மதத்தலைவர்கள் தவறாகக் கற்பிக்கும் சட்டங்களால் கட்டுண்டு, மனிதர்களை, விலங்குகளிலும் கேவலமாக நடத்திவந்த இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே, இயேசு இப்படிச் செய்தார். தொழுநோயாளரின் உடலைத் தொட்டு, குணமாக்கிய இயேசு, சூழ இருந்தவர்களின், மனதைத் தொட்டு, குணமாக்க முயன்றார்.

மூன்றாவது வாரமாக, இயேசுவின் குணமளிக்கும் நிகழ்வுகளை நாம் ஞாயிறு நற்செய்திகளில் கேட்டு வருகிறோம். குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான், அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று, சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதையைப் பெறுவது, அவர்கள் குணம் பெறுவதற்குத் தேவையான முக்கிய வழி என்பதை, இன்றைய நற்செய்தியில் நாம் கற்றுக்கொள்கிறோம்.

பிப்ரவரி 11ம் தேதி நோயாளரின் உலக நாளையும், பிப்ரவரி 14 இஞ்ஞாயிறன்று காதலர் அல்லது, அன்புகொள்வோர் நாளையும் சிறப்பிக்கும் நாம், உண்மையான அன்பின் பொருளைப் புரிந்துகொள்ளவும், அந்த அன்பை, சமுதாயத்தில் வலுவிழந்தோர், வறியோர் மற்றும் நோயுற்றோர் மீது பொழியவும், இறைவன் நமக்கு உள்ளொளியைத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

தன்னை நாடிவந்துள்ள பக்தர்களுக்கு, மனநலத்தையும், உடல் நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தரும் லூர்துநகர் அன்னை மரியாவின் பரிந்துரையால், நாம் அனைவரும், குறிப்பாக, தொழுநோயாலும், கோவிட்-19 பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், நலம்பெற்று வாழ, இறையருளை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2021, 14:31