மகிழ்வின் மந்திரம்: தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் திருமணம்
மேரி தெரேசா: வத்திக்கான்
இளம் தம்பதியர், தங்களது திருமண வாழ்வில், இறையருளில் நம்பிக்கை வைக்க, அவர்களைத் தூண்டுவது மிகவும் அவசியம். இவ்வாறு செய்தால்தான் அவர்களுக்கு, அவ்வாழ்வின் மீது ஆவலும், கவர்ச்சியும் ஏற்படும் (அன்பின் மகிழ்வு 36). இந்த கருத்தை, தன் "அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடலின் 36வது பத்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் மனச்சான்றுகளை உருவாக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை, 37வது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இறையருளுக்குத் திறந்தமனம் கொண்டிருப்பதை ஊக்கப்படுத்தாமல், கோட்பாட்டியல், உயிர்நன்னெறியியல், மற்றும், அறநெறி விவகாரங்கள் ஆகியவற்றை வெறுமனே வலியுறுத்துவதன் வழியே, குடும்பங்களுக்குப் போதுமான ஆதரவை வழங்குகிறோம், திருமணப் பிணைப்பை வலுப்படுத்துகிறோம், மற்றும், திருமண வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கிறோம் என்று, நெடுங்காலமாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். திருமணம், வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கின்ற சுமையாக இல்லாமல், அது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், முழுநிறைவுக்கும் இட்டுச்செல்லும் ஆற்றல்மிக்க பாதையாக, அதனை அறிமுகப்படுத்தவும் கஷ்டப்படுகிறோம். தங்களின் வரையறைகளுக்கு மத்தியில், பலநேரங்களில், நற்செய்திக்கு சிறந்தமுறையில் பதிலுறுக்கும் நம்பிக்கையாளர்களின் மனச்சான்றுகளை உருவாக்குவதையும் கடினமாக உணர்கின்றோம். இவர்கள், குழப்பமான சூழல்களில் தங்களின் தெளிந்துதேர்தலை மேற்கொள்வதற்கும் திறன்படைத்தவர்கள். எனவே, நாம் மனச்சான்றுகளை மாற்றாமல், அவற்றை உருவாக்க அழைக்கப்பட்டுள்ளோம் (அன்பின் மகிழ்வு 37).
"அன்பின் மகிழ்வு (Amoris laetitia)" திருத்தூது அறிவுரை மடலின் 37வது பத்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்