மத்திய கிழக்கு நாடுகளின் முதுபெரும் தந்தையர்களுடன் திருத்தந்தை மத்திய கிழக்கு நாடுகளின் முதுபெரும் தந்தையர்களுடன் திருத்தந்தை 

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் கொணரும் நல்விளைவுகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக் நாட்டில் மேற்கொள்ள உள்ள திருத்தூதுப்பயணத்தின் நோக்கம், மற்றும், அதிகாரப்பூர்வ இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயணத்தின் நோக்கம், மற்றும், அதிகாரப்பூர்வ இலச்சினையை அந்நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

'அனைவரும் உடன்பிறந்தோர்' என்ற திருத்தந்தையின் திருமடலின் தலைப்பை மையமாக வைத்து, 'நீங்கள் அனைவரும் உடன்பிறந்தோர்' (மத்தேயு 23.8) என்ற கூற்று, இத்திருத்தூதுப்பயணத்தின் மையப்பொருளாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திருத்தூதுப்பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினை, வெள்ளைநிறப் பின்னணியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களை வாழ்த்துவது போன்றும், அங்குள்ள ஈராக் வரைபடத்தில் இரு பெரும் நதிகளான Tigrisம்  Euphratesம் பாய்ந்து ஓடுவது போன்றும், வளமையை குறிக்கும் பேரிச்சம் மரம் ஒன்று வளர்ந்திருப்பது போன்றும், ஈராக், மற்றும், வத்திக்கான் கொடிகளுக்கு மேல் அமைதியின் ஒலிவக்கிளைகளைத் தாங்கி, அமைதிப்புறா ஒன்று பறப்பதுபோன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஈராக் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள உள்ள திருத்தூதுப்பயணம், இஸ்லாமியத் தீவிரவாத குழுவினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ள அனைத்து மக்களுக்கும், குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்களுக்கு பெரும் ஆதரவை வழங்கும் அடையாளமாக இருக்கும் என அறிவித்துள்ளார், அந்நாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மிகத் தொன்மை வாய்ந்த al-Mustanṣiriyya பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பத்திரிகையாளருமான Saad Salloum அவர்கள், AsiaNews என்ற கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில், திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப்பயணம் கொணரவுள்ள பல்வேறு நல்விளைவுகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

ஈராக்கிலுள்ள அனைத்து மதங்களின் தந்தையாம் ஆபிரகாமின் ஊர் என்ற நகரும் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்தில் இடம்பெற்றிருப்பது குறித்தும், மதங்களிடையே உரையாடல், தீவிரவாதத்தின் அழிவு, நாட்டின் வருங்காலத்தில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு என்ற பல்வேறு தலைப்புகளிலும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ள பத்திரிகையாளர் Saad Salloum அவர்கள், இன்றைய நிலைகளில், மார்ச் 5 முதல் 8ம் தேதி வரை இடம்பெறவிருக்கும் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் கொணரவுள்ள நல்மாற்றங்கள் குறித்தும் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2021, 14:50