திருக்குடும்பம் திருக்குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: இறைவார்த்தையின் ஒளியில்

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்

மேரி தெரேசா: வத்திக்கான்

Amoris laetitia அதாவது, அன்பின் மகிழ்வு என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது அறிவுரை மடலின் முதல் பிரிவு, இறைவார்த்தையின் ஒளியில் என்ற தலைப்போடு தொடங்குகிறது. திருவிவிலியம் முழுவதும், குடும்பங்கள், பிறப்புகள், அன்புக் கதைகள், மற்றும், குடும்பப் பிரச்சனைகள் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இது, விவிலியத்தின் முதல் பக்கத்திலிருந்து, கடைசிப் பக்கம் வரை உண்மையாகிறது.  விவிலியத்தின் முதல் பக்கத்தில், ஆதாம், மற்றும், ஏவாளின் குடும்பம், தனது அனைத்து வன்முறைச் சுமையோடு தோன்றுவதும், அதேநேரம், தனது சக்தியோடு அதனை தாங்கிக்கொள்வதும் (காண்க. தொ.நூ.4), அதன் கடைசி பக்கத்தில், மணமகன் மற்றும், ஆட்டுக்குட்டியின் திருமண விழா (தி.வெ.21:2,9) நடைபெறுவதும் தரப்பட்டுள்ளன. பாறைமீதும், மணல்மீதும் (காண்க.மத்.7: 24-27) கட்டப்படும் இரு வீடுகள் பற்றி இயேசு கூறிய விளக்கம், எண்ணற்ற குடும்பச் சூழல்கள், அதன் உறுப்பினர்கள், தங்கள் சுதந்திரத்தைச் செயல்படுத்துவதால் வடிவமைக்கப்படுவதைக் குறிக்கின்றது. “ஒவ்வொரு வீடும் ஒரு விளக்குத்தண்டு” என்று கவிஞர் (Jorge Luis Borges) ஒருவர் கூறுகிறார். இன்றும்கூட, யூத மற்றும், கிறிஸ்தவத் திருமண திருவழிபாடுகளில் முழங்கப்படும் திருப்பாடல் ஆசிரியரின் ஒரு பாடலால் வழிநடத்தப்பட்டு, அந்த இரு வீடுகளில் ஒன்றில் இப்போது நாம் நுழைவோம்.

  • “ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
  • உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!
  • உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.
  • ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
  • ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!
  • நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!” (தி.பா.128,1-6) (Amoris laetitia எண் 08)

இவையே, இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தம்பதியினர் ஒவ்வொருவரும் இறைவனிடம் மன்றாடும், மற்றும், விரும்பி எதிர்ப்பார்க்கும் நற்பேறுகள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2021, 16:17