தென்சூடானில் வெள்ளப்பெருக்கு தென்சூடானில் வெள்ளப்பெருக்கு  

தென் சூடான் வெள்ளப்பெருக்கின் பாதிப்புகள்

2013ம் ஆண்டில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்படத் துவங்கிய தென் சூடானில் 16 இலட்சம் பேர், நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் சூடான் நாட்டில் அண்மை வெள்ளப்பெருக்காலும், கொரோனா தொற்றுநோயாலும், மேலும் பல நெருக்கடிகளாலும் எழுந்துள்ள துயர் நிலைகளுக்கு தீர்வு காண ஏனைய நாடுகள் உதவவேண்டும் என, அந்நாட்டின் கிறிஸ்தவ சமுதாயங்கள் இணைந்து விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளன.

அண்மை வெள்ளப்பெருக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், போதிய மனிதாபிமான உதவிகள் இன்றி துயருறும் மக்களுக்கு உதவ வேண்டியது வெளிநாடுகள், மற்றும், உதவி நிறுவனங்களின் கடமை என உரைத்துள்ள கிறிஸ்தவ சபைகளின் விண்ணப்ப அறிக்கையில், Jubaவின் கத்தோலிக்க பேராயர் Stephen Mulla உட்பட பல தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

நைல் நதி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குடிநீர், நல ஆதரவுப்பணிகள், உணவு, தங்குமிடம், மருத்துவ உதவிகள் ஆகியவைகளை வழங்குவதற்கு, ஐந்து இலட்சம் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக, தென் சூடான் கிறிஸ்தவ தலைவர்களின் விண்ணப்பம் தெரிவிக்கிறது.

சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே, அதாவது, 2013ம் ஆண்டிலேயே  உள்நாட்டுப்போரால் பாதிக்கப்படத் துவங்கி, தற்போதுவரை அவைகளின் விளைவுகளை அனுபவித்துவரும் தென் சூடானின் மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 11 இலட்சத்தில், 16 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய வெள்ளப்பெருக்கால், ஏழு இலட்சம் பேர் வரை, புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2020, 16:12