புது டெல்லியில் தலித் மக்களின் போராட்டம் புது டெல்லியில் தலித் மக்களின் போராட்டம்  

இந்தியாவின் தலித் விடுதலை ஞாயிறு

பெண் தெய்வங்களை, அதிகாரம், அறிவு, மற்றும், செல்வமாக வழிபடும் இந்தியாவில், தலித் இன பெண்கள் பாதுகாப்பாற்ற நிலையில், அதிக அளவில் துன்பங்களை அனுபவிக்கும் நிலை உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் தலித் விடுதலை ஞாயிறை இவ்வாண்டு 'சாதிக்கு சவால்: தலித் பெண்களின் மாண்பை உறுதிச் செய்தல்' என்ற தலைப்பில் அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகளும் இணைந்து இஞ்ஞாயிறன்று சிறப்பித்தன.

இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் துன்பங்களை அனுபவித்துவரும் தலித் இன மக்களை, குறிப்பாக, தலித் இன பெண்களின் மாண்பு குறித்து அதிக அக்கறை காட்டப்பட வேண்டும் என, இந்திய கத்தோலிக்க திருஅவையும், தேசிய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

பெண் தெய்வங்களை, அதிகாரம், அறிவு, மற்றும், செல்வமாக வழிபடும் இந்தியாவில், பெண்கள், குறிப்பாக தலித் இன பெண்கள் பாதுகாப்பாற்ற நிலையில், அதிக அளவில் துன்பங்களை அனுபவிக்கும் நிலை உள்ளது என்ற கவலையை வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின், வறியோர் மற்றும் பழங்குடியினர் அவையின் தலைவர், ஆயர் சரத் சந்திர நாயக் அவர்கள், கிறிஸ்தவ சமுதாயம் அவர்களை நினைவில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அண்மைக்காலங்களில் பல தலித் பெண்கள், திட்டமிட்டு தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும், இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் அரசியல் தலைவர்களின் துணையுடன் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிவதைக் காணமுடிகிறது எனவும் கூறினார் ஆயர்.

இந்துக்கள் அல்லாத தலித் இன மக்களுக்கு அனைத்து சலுகைகளும் 1950ம் ஆண்டு அரசியலமைப்பின்படி, தடுக்கப்பட்டபோதிலும், 1956ம் ஆண்டு சீக்கிய மத தலித் இன மக்களுக்கும், 1990 ஆண்டு புத்தமத தலித் இனத்தவருக்கும் இந்த சலுகைகள் திரும்பவும் வழங்கப்பட்டன. அனால், இந்திய கிறிஸ்தவ, மற்றும், இஸ்லாம் மத தலித் இன மக்கள் தங்கள் சலுகைகளுக்காக இன்னும் போராட வேண்டிய நிலையே இருந்து வருகிறது.

இந்தியாவின் ஏறக்குறைய 120 கோடி மக்களுள் 20 கோடியே 10 இலட்சம் பேர், சமுதாயத்தில் சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர். இந்தியாவின் 2 கோடியே 50 இலட்சம் கிறிஸ்தவர்களுள் 60 விழுக்காட்டினர், தலித், மற்றும், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2020, 14:27