அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் 

மரணதண்டனை நிறைவேற்றவிருப்பதை தடுக்கும் ஆயர்கள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றவிருப்பதை நிறுத்துமாறு, அந்நாட்டு ஆயர் பேரவை, வலிமையான விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 19, இவ்வியாழனன்றும், டிசம்பர் மாதம் இரு நாள்களிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு மூவருக்கு மரணதண்டனை நிறைவேற்றவிருப்பதை நிறுத்துமாறு, அந்நாட்டு ஆயர் பேரவை, வலிமையான விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவர் பேராயர் Paul Coakley அவர்களும், வாழ்வுக்கு ஆதாரமான செயல்பாடுகள் பணிக்குழுவின் தலைவர் பேராயர் Joseph Naumann அவர்களும், அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கும், நீதித்துறையின் தலைவர் வில்லியம் பார் அவர்களுக்கும் இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளனர்.

1938ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிகழ்ந்த 4 மரண தண்டனைகளே இதுவரை அதிக எண்ணிக்கையில் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டும் ஆயர்கள், 2'020ம் ஆண்டு 10 மரணதண்டனை தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பது ஏனைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மரணதண்டனைகளைக் காட்டிலும், இரு மடங்கிற்கு அதிகம் என்பதையும் சுட்டிக்காட்டி, மனித உயிருக்கு மதிப்பு வழங்கவேண்டும் என்ற கத்தோலிக்கக் கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

மரணதண்டனையை முற்றிலும் நிராகரிக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட Fratelli tutti என்ற திருமடலில் கூறியுள்ளதையும் ஆயர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2020, 14:48