பங்களாதேஷில் விருதுபெற்ற கத்தோலிக்க இளைஞர்கள் பங்களாதேஷில் விருதுபெற்ற கத்தோலிக்க இளைஞர்கள் 

பங்களாதேஷில் கத்தோலிக்க இளைஞர்களுக்கு விருது

Uttaran Juba Sangathan அமைப்பைச் சார்ந்த கத்தோலிக்க இளைஞர்கள், தங்களின் சூழல்கள் மற்றும், துன்பநிலைகளைப் பொருட்படுத்தாது, வறிய கிராம மக்களின் வளர்ச்சிக்காக மிகப்பெரும் பணிகளை ஆற்றி வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டில், ஒதுக்குப்புறமான மற்றும், கடும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக, அந்நாட்டின் கத்தோலிக்க இளைஞர் அமைப்பு ஒன்று பல ஆண்டுகளாக, ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி, அந்த அமைப்பிற்கு, அந்நாட்டின் உயரிய Joy Bangla இளைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Uttaran Juba Sangathan எனப்படும் அமைப்பைச் சார்ந்த கத்தோலிக்க இளைஞர்கள், தங்களின் சூழல்கள் மற்றும், துன்பநிலைகளைப் பொருட்படுத்தாது, வறிய கிராம மக்களின் வளர்ச்சிக்காக மிகப்பெரும் பணிகளை ஆற்றிவருகின்றனர் என்று, இந்த விருதுக் குழுவின் தலைவரும், பங்களாதேஷ் பிரதமர் Sheikh Hasina அவர்களின் மகனுமான, Sajeeb Wazed அவர்கள் அறிவித்தார்.

நவம்பர் 17, இச்செவ்வாயன்று இவ்விருதை வழங்கிய Sajeeb Wazed அவர்கள், இவ்வாண்டு  Joy Bangla இளைஞர் விருதுக்கென 700க்கும் அதிகமானோர் பரிந்துரைக்கப்பட்டனர் என்றும், இந்தக் குழுவின் இளைஞர்கள், எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன்னார்வத்தோடு இப்பணியை ஆற்றிவருகின்றனர் என்றும் கூறினார்.

பங்களாதேஷில், Kharia என்ற இனத்தைச் சேர்ந்த கத்தோலிக்கரான Pius Nanuar என்பவர், Barmachhera என்ற கிராமத்தின் தன்னார்வலர்களின் உதவியுடன், 2009ம் ஆண்டில், Uttaran Juba Sangathan என்ற அமைப்பை ஆரம்பித்தார். இந்த அமைப்பிலுள்ள 110 உறுப்பினர்கள் மற்றும், 330 தன்னார்வலர்கள், இருபது கிராமங்களில் உழைத்து வருகின்றனர் என்று யூக்கா செய்தி கூறுகிறது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2020, 14:58