"இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" என்று இயேசு கூறினார். - மத்தேயு 20:16 "இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" என்று இயேசு கூறினார். - மத்தேயு 20:16 

பொதுக்காலம் - 25ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

"நான் கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்? கடவுளை கடவுளாய் இருக்கவிடாமல், நமது எண்ணங்களின்படி, அவரை, வளைத்து, நெளித்துவிடுவதால், அமைதியின்றி தவிக்கிறோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 25ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

இரயில் நிலையம் ஒன்றில், பயண முன்பதிவு செய்வதற்காக, வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. அவ்வளவு பேர் காத்திருந்தபோதிலும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்துகொண்டிருந்தார். நான், அந்த முன்பதிவு சன்னல் அருகே செல்ல, குறைந்தது, அரை மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றி,  நான் பையில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. பதிவு செய்யும் சன்னலை நெருங்கிவிட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றோர் அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப்பின், வரிசையில் நின்றுகொண்டிருந்த பலர், அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர், எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப்பார்த்து சிரித்ததைப்போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்களோ, அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.

வீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்பது புரிந்தது. அதேபோல், அரைமணி நேரம் சென்றதும், என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை, வேறு யாரும் பறித்துச்செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப்பின் வந்து வரிசையில் நின்ற சிலர், எனக்கு இணையாக, அல்லது, எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர்.

நியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும், அரைமணி நேரமாவது, அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். இல்லையா? ‘நியாயமாகப் பார்த்தால்’ என்று நாம் பயன்படுத்தும் பேச்சுவழக்கு, நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் எரிச்சலை, கோபத்தை நியாயப்படுத்த, நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்கு.

இன்றைய நற்செய்தியில் நாம் கேட்கும் உவமை, இதேபோன்றதொரு கோபத்தை நமக்குள் உருவாக்கக்கூடும். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள் இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு முதலாளியைப் பற்றிய உவமை இது.

திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றச் செல்லும் வேலையாள்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் கூலியையும் மையப்படுத்தி இவ்வுவமை சொல்லப்பட்டுள்ளதால், இயேசு உழைப்பைப்பற்றியும், உழைப்பிற்கேற்ற நியாயமான கூலியைப்பற்றியும் பேசுவதாக எண்ணிப்பார்க்க வாய்ப்பு உண்டு. ஆனால், இயேசு, இவ்வுவமையின் ஆரம்பத்தில், "விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்" (மத்தேயு. 20:1) என்று கூறுவதால், விண்ணரசின் பண்புகளை விளக்கும் மற்றுமோர் உவமையாக இதைச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். அந்த அரசில் யார் நுழையமுடியும், அல்லது முடியாது என்பதைத் தெளிவுபடுத்தும் ஒரு பாடமாக, இவ்வுவமையை நாம் எண்ணிப்பார்க்கலாம். இந்த எண்ணத்தை வலியுறுத்தும் வண்ணம், இவ்வுவமையின் இறுதி வரிகள் அமைந்துள்ளன: "இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்" என்று இயேசு கூறினார். (மத். 20:16)  

முதன்மையானோர், கடைசியானோர் என்ற இரு சொற்களைக் கொண்டு, இயேசு வார்த்தை விளையாட்டு நடத்துவதைப்போலத் தோன்றலாம். ஆனால், யாருக்கு முதலிடம், யாருக்கு கடைசி இடம் என்று உலகம் வைத்திருக்கும் அளவுகோல்களுக்கு முற்றிலும் மாறுபட்டதோர் அளவுகோலை, இயேசு, இவ்வுவமையில் பயன்படுத்தியுள்ளார்.

தன் திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்ய தொழிலாளிகளைத் தேடிச்செல்லும் ஒரு முதலாளியின் கதை இது. காலை 6 மணி முதல் அவர் ஆள்களை வேலைக்கு அமர்த்துகிறார். மாலை ஐந்து மணி வரை ஆள்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலை 6 மணிக்கு  கூலி கொடுக்கப்படவேண்டும். அவர்களுக்கு மாலை 6 மணிக்கு கூலி கிடைத்தால்தான், அவர்களால், இரவு உணவை, தன் மனைவி, மக்களுக்கு வாங்கிச் செல்லமுடியும் என்ற எண்ணத்தில், இச்சட்டம் வகுக்கப்பட்டிருந்தது. எனவே, உவமையில் வரும் முதலாளி, மாலை ஆறுமணி ஆனதும், தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கத் துவங்குகிறார்.

இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சிகரமான ‘புரட்டிப்போடுதல்’ நிகழ்கின்றது. இந்த உவமையிலும் ‘புரட்டிப்போடுதல்’ நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலை செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கச் சொல்கிறார். இந்த உவமையின் ‘புரட்சி’ இங்கு ஆரம்பமாகிறது.

ஒரே ஒரு மணி நேரம் உழைத்த அவர்களுக்கு, ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குத் தலைகால் புரியாத, ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலை 6 மணி முதல் மாலை 6 வரை உழைத்தவர்களுக்கும், இதைக் கண்டு, மகிழ்ச்சி உருவாகியிருக்கும். காரணம்... ஒரு மணி நேரம் உழைத்தவர்களுக்கே ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கிடைத்ததென்றால், தங்களுடைய 12 மணி நேர உழைப்பிற்கு, 12 தெனாரியம் கிடைக்கலாம் என்று அவர்கள் மனம் கணக்கிட்டிருக்கும். எனவே, அவர்களும் ஆனந்த எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்தனர்.

ஆனால், நடந்தது என்ன? அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர்களது கண்ணோட்டத்தில், இது, அநியாயம், அக்கிரமம், அநீதி. தீர ஆய்வுசெய்தால், அவர்களுக்கு அநீதி ஏதும் இழைக்கப்படவில்லை என்பது புரியும். ஆனால், இறுதி ஒருமணி நேரம் உழைத்தவர்களுக்கு ஒரு தெனாரியம் கிடைத்தது என்ற அந்த ஒப்புமை அளவுகோலின் அடிப்படையில் பார்க்கும்போது, காலையிலிருந்து உழைத்தவர்களுக்குக் கிடைத்த நீதியான ஒருநாள் கூலி, அநீதமானக் கூலியாகத் தெரிந்தது. அவர்கள் அடைந்த ஏமாற்றமும், எரிச்சலும், நமக்கும் நியாயமாகத் தெரிகின்றன.

அடுத்தவருக்கு என்ன கிடைக்கிறது என்பதில் நம் கவனம் திரும்பும்போது, ஒப்புமைகள் தோன்றுகின்றன. நமது உழைப்பு, நமது திறமை ஆகியவற்றின் அடிப்படையில் நமக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் கொண்டு மனநிறைவு அடையும் நாம், அடுத்தவர் பெறுவது எவ்வளவு என்ற ஒப்புமைக்கணக்கு பார்க்கும்போது, மனநிறைவை இழந்து, குறைகூற ஆரம்பிக்கிறோம்.

கணணித்துறையில் பணிசெய்பவர்கள் மத்தியில், ஒரு சில ஆண்டுகளுக்கு முன், கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அவர்கள் வாங்கும் ஊதியம்பற்றிய கருத்துக்கணிப்பு அது. பல இளைஞர்கள், தாங்கள் வாங்கும் ஊதியம் குறித்து மகிழ்ச்சி என்று சொன்னார்கள். அதிலும், தாங்கள் அந்த வயதில் வாங்கும் ஊதியம், தங்கள் தந்தை, முப்பது ஆண்டுகள் உழைத்த பின்னும் கிடைக்காத ஓர் ஊதியம் என்று, தங்கள் நிலையைக் குறித்து மகிழ்வடைந்தனர். ஆனால், அந்தக் கருத்துக் கணிப்பின் இறுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, அவர்களைப் போலவே பட்டம்பெற்ற ஒரு சிலர், அவர்களைவிட இன்னும் அதிகமாய் ஊதியம் பெறுகிறார்கள் என்ற செய்தியை அவர்களிடம் சொன்னபின், மீண்டும், அவர்களது கருத்துக்களைப் பதிந்தபோது, அவர்களிடம், முன்னர் இருந்த மகிழ்ச்சி எல்லாம் மறைந்தாகவும், அவர்கள் வருத்தம் அடைந்ததாகவும், அந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.

நாம் செய்கின்ற தொழிலுக்கு ஏற்ற ஊதியம் நமக்குக் கிடைக்கிறது, அல்லது, நமது தந்தையின் காலத்தைக் காட்டிலும் நமக்கு அதிகம் கிடைக்கிறது என்று எண்ணி மகிழ்வும், மனநிறைவும் அடையும் நாம், நம்மைப்போலவே உழைக்கும் மற்றொருவர், இன்னும் அதிகம் பெறுகிறார் என்று தெரிந்ததும், நம் மகிழ்வையும், மனநிறைவையும் தொலைத்துவிடுகிறோம். எரிச்சலும், கோபமும் அடைகிறோம். இதைவிடக் கொடுமை என்னவென்றால், நம்மைவிடக் குறைவாக வேலைசெய்யும் ஒருவர், நமக்கு ஈடாக, அல்லது நம்மைவிட அதிகம் ஊதியம் பெறுகிறார் என்று தெரிந்தால், நமது கோபம் அதிகமாகிறது. நம் மகிழ்வும், மனநிறைவும் எந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவாகின்றன என்பதை ஆய்வுசெய்வது நல்லது.

திராட்சைத்தோட்ட உரிமையாளர் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளிக்கும் அவர் அநீதி இழைக்கவில்லை. அனைவருக்கும், நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு, நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, இரக்கத்துடன் செயல்பட்டார். நீதியோடு மட்டுமல்லாமல், இரக்கத்தோடும் நடப்பவர் இறைவன் என்பதை, இன்றைய பதிலுரைப்பாடல் இவ்வாறு கூறுகிறது: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. (தி.பா.145:17)

நீதி என்ற நிலையைத் தாண்டி, முதலாளி காட்டிய தாராளகுணத்தை, சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் தவித்த பணியாளர்களைப்போல், இறைவனின் வழிமுறைகளைப் புரிந்துகொள்ளமுடியாமல் நாமும் தடுமாறுகிறோம்!

அளவுகடந்த அன்பும், தரமறியாது வழங்கும் தாராளகுணமும் கொண்டவர் இறைவன். உண்மைதான். நீதியோடு, நடுநிலையோடு செயல்படுபவர் இறைவன். உண்மைதான். இவ்விரு குணநலன்களையும் தனித்தனியே சிந்திக்கும்போது, பிரச்சனைகள் இல்லை. ஆனால், இறைவனின் அன்பையும், நீதியையும் இணைக்கும்போது, பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. நம் எண்ணங்களும், இறைவனின் எண்ணங்களும் வேறுபட்டவை என்பதை, இன்றைய முதல் வாசகம், இவ்வரிகளில் நினைவுறுத்துகிறது:

எசாயா 55:8-9

என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

தன் உவமைகள் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளும், நமது எண்ணங்களில் வளர்ந்துள்ள கடவுளும், மாறுபட்டவர்கள். இந்த உவமையின் இறுதியில், அந்த முதலாளி கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு முறை, கவனமாகக் கேட்போம்: ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை... உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ (மத். 20:13-15)

"நான் கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்? கடவுளை கடவுளாய் இருக்கவிடாமல், நமது எண்ணங்களின்படி, அவரை, பல விதங்களில் வளைத்து, நெளித்துவிடுவதால், அமைதியின்றி தவிக்கிறோம்.

கடவுளின் அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்கமுடியாமல் தவிப்பது நாம்தான். கடவுள் இல்லை. கடவுள், தன் நீதியிருக்கையில் அமர்ந்து தீர்ப்பு வழங்குவதற்கு முன், நாம், கடவுளின் நீதியிருக்கையில் அமர்ந்து, நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு தீர்ப்புகள் வழங்கிவிடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் வழங்கிய தீர்ப்பைத்தான் கடவுளும் தருவார் என்றும் முடிவு செய்துவிடுகிறோம்.

அந்நேரத்தில், கடவுள், தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராளகுணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது, அவரைப் புரிந்துகொள்ளமுடியாமல், தடுமாறுகிறோம். இறுதியில் வந்தவர்களுக்கு, நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளை இறைவன் செய்யும்போது, நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கோபம் கொள்கிறோம். அவ்வேளையில், கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?

கடவுளை கடவுளாகவே இருக்கவிடுவோம். அப்போது, நமக்கும், அந்தத் தெய்வீக இயல்பில், ஒரு சிறு பங்காவது கிடைக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2020, 13:55