திருஅவையின் பிறரன்பு நடவடிக்கைகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுடன் ஒருமைப்பாட்டை வெளியிடும்வண்ணம், அவர்களுக்காக செபிக்கும் நாளாக செப்டம்பர் 6ம் தேதியை, ஜெர்மன் தலதிருஅவை, அறிவித்து, சிறப்பித்துள்ளது.
இந்த செபம் மற்றும் ஒருமைப்பாட்டு நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஜெர்மன் ஆயர் பேரவையின் தலைவரான, ஆயர் Georg Bätzing அவர்கள், மக்கள் அச்சத்திலும், ஆபத்திலும் வாழும்போது, திருஅவையின் மேய்ப்புப்பணி நடவடிக்கைகள், அதிலும் குறிப்பாக, பிறரன்பு நடவடிக்கைகள், அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றன என தன் செய்தியில் கூறியுள்ளார்.
உலகின் ஏனையப் பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்கு உதவிகளை கடந்த பல ஆண்டுகளாக வழங்கிவரும் ஜெர்மன் கிறிஸ்தவர்கள், இந்த கோவிட்-19 காலத்தில், கிறிஸ்தவ நம்பிக்கையின் அடையாளமாக செயல்பட்டு வந்தது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார்.
இந்த கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நலப்பிரச்னைகளாலும், ஏழ்மையாலும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் அடித்தட்டு மக்களை, நம் உதவிகளும் ஒருமைப்பாட்டுணர்வும் சென்றடையவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Georg Bätzing.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்