சிரியாவில் புதிய Hagia Sophia கிறிஸ்தவக் கோவிலைக் கட்டும் திட்டம
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
துருக்கி நாட்டின் Hagia Sophia கிறிஸ்தவக் கோவிலை, இஸ்லாமிய மசூதியாக மாற்றியுள்ள அந்நாட்டு அரசின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, அதையொத்த ஒரு கிறிஸ்தவக் கோவிலை தன் நாட்டில் கட்ட உள்ளதாக அறிவித்துள்ளார், சிரியாவின் அரசுத்தலைவர்.
துருக்கியின் Hagia Sophia கோவிலைப்போல் அதே வடிவமைப்புடன், சிரியா அரசால் கட்டப்பட உள்ள இக்கோவிலுக்கு இரஷ்யாவும் உதவ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய கிறிஸ்தவ கோவில், மதங்களிடையே அமைதியான கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டும் என்ற சிரியா அரசின் ஆவலை வெளிப்படுத்துவதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில், குறிப்பாக வட சிரியாவில், துருக்கி இராணுவத்தின் தலையீட்டைத் தொடர்ந்து எதிர்த்துவரும் சிரியாவும், சிரியாவுக்கு தன் ஆதரவை தொடர்ந்து வழங்கிவரும் இரஷ்யாவும் இணைந்து, சிரியாவில், கிறிஸ்தவ கோவில் ஒன்றைக் கட்ட முன்வந்திருப்பது, அரசியல் நோக்கமுடையது என்று, சில வல்லுநர்கள் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
கிறிஸ்தவக் கோவிலை மசூதியாக மாற்றிய துருக்கி அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதே போன்ற ஒரு கோவிலை சிரியாவில் கட்டுவதற்கு அரசு முடிவெடுத்திருப்பது, சிரியா நாட்டு பிரச்சனையில், இந்த மூன்று நாடுகளையும் மேலும் ஈடுபடுத்தும் ஒரு செயலாக இருக்கும் என சிலர் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் Hagia Sophia கோவிலைப்போல் ஒன்றைக் கட்டித்தருவதாக சிரியா அரசுத்தலைவர் Bashar Al-Assad அவர்கள் அறிவித்துள்ளது, துருக்கிக்கு எதிர்ப்பு காட்டும் ஒரு செயலேயன்றி, கிறிஸ்தவர்கள்மீது கொண்ட அன்பினால் அல்ல, ஏனெனில், சிரியாவில், கிறிஸ்தவர்கள், முழு உரிமைகள் அற்றவர்களாகவே வாழ்கிறார்கள் எனவும், சில அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்