இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.. லூக்கா 7:15 இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.. லூக்கா 7:15 

விவிலியத்தேடல்: கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 5

நயீன் நகர கைம்பெண்ணின் மகனுக்கு மறுவாழ்வு தந்ததன் வழியே, அந்தக் கைம்பெண்ணுக்கும் மறுவாழ்வு தந்த இயேசு, இன்றைய உலகில், கைம்பெண்களுக்கு உரிய மதிப்பை வழங்கி, அவர்களைப் பேணிக்காக்கும் மனதை நமக்குத் தரவேண்டுமென மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 5

கருத்தரங்கு ஒன்றில் உரை வழங்கிக்கொண்டிருந்த பேச்சாளர், திடீரென, தன் 'பர்ஸை'த் திறந்து, ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்தார். "இந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும்?" என்று கேட்டபோது, அரங்கத்தில் இருந்த பலர் கைதூக்கினர். 'கொஞ்சம் பொறுங்கள்' என்று சொன்ன பேச்சாளர், அந்த 500 ரூபாய் நோட்டைக் கசக்கினார். கசங்கிப்போன நோட்டைக் காட்டி, "இப்போது, இது யாருக்கு வேண்டும்?" என்று கேட்டபோது, கரங்கள் மீண்டும் உயர்ந்தன. பேச்சாளர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் மிதித்தார். பின்னர், அதைக் கையில் எடுத்து, "இது யாருக்கு வேண்டும்?" என்று கேட்டபோது, அரங்கத்தில் பலரது கரங்கள் உயர்ந்தன.

பேச்சாளர் தொடர்ந்தார்: "நண்பர்களே, இந்த ரூபாய் நோட்டை நான் கசக்கினாலும், மிதித்தாலும் அதன் மதிப்பு குறையவில்லை என்பதை நீங்கள் நம்பியதால், அது வேண்டும் என்று சொன்னீர்கள். ஒரு காகிதத்திற்கு இவ்வளவு மதிப்பு தரும் நீங்கள், உங்களுக்கு நீங்களே மதிப்பு தருகிறீர்களா? அல்லது, மற்ற மனிதர்களுக்கு அந்த மதிப்பைத் தருகிறீர்களா?" என்று கேட்டபோது, அரங்கம் அமைதியானது.

வாழ்வின் பல சூழல்களில், சுழல்களில் சிக்கித் தவிக்கும்போது, வாழ்வுச் சக்கரம் நம்மைக் கசக்கிப் பிழிவதைப்போல் உணரும்போது, மற்றவர்களால் மிதிபடுவதைப்போல் உணரும்போது, நம்மைப்பற்றிய மதிப்பும், நம்பிக்கையும் குறைந்து, தாழ்வு மனப்பான்மை அதிகரிப்பதால், மனமுடைந்து போகிறோம். அதேபோல், கசக்கப்பட்டு, மிதிபட்டு வாழும் மற்றவரையும் மதிக்க மறுக்கிறோம்.

இஸ்ரயேல் சமுதாயத்தில் வாழ்ந்த கைம்பெண்கள், பல்வேறு சுமைகளால் கசக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு வாழ்ந்தனர். அந்த நிலையில் வாழ்ந்த நயீன் நகர கைம்பெண்ணுக்கு இயேசு ஆற்றிய புதுமையில், நம் தேடல் பயணம் தொடர்கிறது. அந்தப் பெண்ணுக்கு உரிய மதிப்பை வழங்கி, அவரது தேவையைத் தீர்க்க முன்வருகிறார், இயேசு.

அந்தக் கைம்பெண்ணின் உண்மையான மதிப்பை தான் உணர்ந்தால் மட்டும் போதாது, மற்றவர்கள் மனதிலும் பதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், இப்புதுமையை, எவ்வித விண்ணப்பமோ, அழைப்போ இன்றி இயேசு ஆற்றினார்.

தானாகவே முன்வந்து, இயேசு ஆற்றிய இப்புதுமை, முன்னறிவிப்பு ஏதுமின்றி, வாழ்வில் நாம் பெற்றுள்ள, அல்லது, செய்துள்ள நற்செயல்களைப்பற்றி சிந்திக்க, நம்மை அழைக்கிறது. உதவிகள் தருவதிலும், பெறுவதிலும், பல வகைகள். உதவி தேவை என்று ஒருவரிடம் கூறும்போது, அல்லது விண்ணப்பிக்கும்போது, அந்த உதவியைத் தருவதிலும், பெறுவதிலும் ஒரு தனி நிறைவு கிடைக்கும். ஆனால், அதைவிட மேலான ஒரு நிலையும், நம் வாழ்வில் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

நமது தேவைகளை யாரிடம் சொல்வது, சொன்னாலும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று கவலையிலும், விரக்தியிலும் நாம் இருந்தபோது, நம் நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ, நம் மனதை அறிந்தவர்கள் போல், அவர்களாகவே முன்வந்து, நம் தேவைகளைத் தீர்த்துவைக்கும்போது, நாம் ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறோம், இல்லையா?

ஆகஸ்ட் 7ம் தேதி, கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தின்போது, உதவிய அன்புள்ளங்களை நினைத்துப்பார்ப்போம். கோவிட் 19 கொள்ளைநோயின் பாதிப்புக்களைக் குறித்து கவலைப்படாமல், பொதுமக்கள், இந்த மீட்புப்பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். காயமுற்றோருக்கு உதவியாக, அந்த நெருக்கடி வேளையில், இரத்ததானம் செய்துள்ளனர். தொற்றுக்கிருமியின் ஆபத்துக்களைப் புறந்தள்ளி, மனிதாபிமானம் என்ற உன்னத உண்மையை முன்னிறுத்தி, இவ்வுதவிகளை, யாருடைய தூண்டுதலோ, வேண்டுதலோ இன்றி, பொதுமக்கள் செய்துள்ளனர் என்பதை எண்ணிப்பாக்கும்போது, நம் உள்ளங்களில் நன்றியும், நம்பிக்கையும் பிறக்கின்றன.

இயற்கைப் பேரிடர்கள், விபத்துக்கள் ஆகிய வேளைகளில், யாருடைய அழைப்பும் இன்றி, எவ்வித பலனையும் எதிர்பாராமல் உதவிசெய்வோரைக் குறித்து எந்த ஊடகமும் கவனம் செலுத்துவதில்லை. அதேபோல், நம் ஒவ்வொருவரின் வாழ்விலும், நண்பர்களோ, அல்லது, முன்பின் தெரியாதவர்களோ, உதவிகள் செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்போது, ஏதோ அந்த இறைவனே, அவர்கள் வடிவில் வந்து போனதுபோல் நாம் உணர்ந்ததில்லையா? அந்த உணர்வே, நயீன் நகரக் கைம்பெண்ணின் உள்ளத்திலும் பெருகியிருக்கவேண்டும்.

கேட்காமலேயே நம்மை வந்து சேரும் நன்மைகளைப் பற்றி சிந்திக்கும்போது, "இந்த அன்புச் சங்கிலியை உடைக்காதீர்கள்" என்ற தலைப்பில், இணையதளத்தில் வெளியான ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஆஞ்செலா என்ற பெண்மணிக்கு 70 வயது. கைம்பெண்ணாகிய அவர், தனியாக வாழ்ந்துவந்தார். கார் ஓட்டத்தெரிந்தவர் என்பதால், தன் தேவைகளை, தானே நிறைவேற்றிக்கொண்டார். ஒருநாள், அவர், பக்கத்து ஊரில் வாழ்ந்த தன் தோழியைப் பார்த்துவிட்டு, தன் காரில், வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் கார் திடீரென நின்றுவிட்டது. அவ்வழியே வந்த கார்களை நிறுத்த கைகளை நீட்டினார், ஆஞ்செலா. அவர் பயணித்த பாதையோ, கள்வர் பயம் நிறைந்த பாதை என்பதால், ஒருவரும் நிறுத்தவில்லை. பொழுது சாயும் நேரம் அது. எனவே, ஆஞ்செலாவுக்கு அச்சம் கூடியது.

அவ்வேளையில், எதிர்புறத்திலிருந்து ஒரு லாரி வந்துநின்றது. அந்த லாரியை ஓட்டிவந்த இராபர்ட், கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அவர் லாரியை விட்டு இறங்கி, தன்னை நெருங்கி வர, வர, ஆஞ்செலாவின் அச்சம் கூடியது. பிரச்சனை என்ன என்பதைக் கேட்டு, தனக்குத் தெரிந்த அளவு காரை சரி செய்தார், இராபர்ட். பின்னர், அவர் ஆஞ்செலாவிடம், "இப்போதைக்கு இந்தக் கார் ஓடும். ஆனால், அருகில் உள்ள ஊரில், இதை நீங்கள் முழுமையாகச் சரி செய்துகொள்வது நல்லது" என்று கூறினார்.

தனக்கு உதவிசெய்ய வந்தவர் மீது தான் கொண்டிருந்த முற்சார்பு எண்ணங்களை நினைத்து வெட்கப்பட்டார், ஆஞ்செலா. பின்னர், தன் ‘பர்ஸி’லிருந்து, பணம் எடுத்து, அவரிடம் நீட்டினார். இராபர்ட், அதை வாங்க மறுத்தார். "நீங்கள், அடுத்தமுறை, தேவையில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கும்போது, அவருக்கு உதவி செய்யுங்கள். அது போதும். இந்த அன்புச்சங்கிலியை உடைக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டு, தன் லாரியை ஓட்டிச் சென்றார்.

ஆஞ்செலா, அடுத்த ஊருக்குள் சென்றதும், ஒரு கார் மெக்கானிக் கடையைக் கண்டார். அவரிடம் தன் பிரச்சனையை சொன்னார். காரை சரி செய்ய அரை மணி நேரம் ஆகும் என்று மெக்கானிக் சொன்னதும், அருகிலிருந்த ஓர் உணவகத்திற்குச் சென்றார், ஆஞ்செலா. அந்த உணவகத்தில், நான்சி என்ற ஒரு பெண், மேசைகளைத் துடைத்துக் கொண்டிருந்தார். நிறை கர்ப்பிணியான அவர், ஆஞ்செலாவுக்குத் தேவையானவற்றை சிரித்தமுகத்துடன் பரிமாறினார். அவரது உடல்நிலையைப் பற்றி பேச்சு எழுந்தபோது, தனக்கு அடுத்த வாரம் பிரசவத் தேதி குறிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு இன்னும் சிறிது பணம் தேவை என்பதால், தான் கூடுதல் நேரம் உழைப்பதாகவும், நான்சி கூறினார்.

இறுதியில், 'பில்' வந்தபோது, அந்த 'பில்' தொகையுடன் கூடுதலாக 500 டாலர்களை, ஆஞ்செலா, அந்தத் தட்டில் வைத்தார். அந்த பில்லுக்குப் பின்புறம், "நான்சி, இது உன்னுடைய பிரசவத்திற்கு உதவும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒருவர் உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, நான் இந்த உதவியைச் செய்கிறேன். இந்த அன்புச்சங்கிலியை உடைக்கவேண்டாம்" என்று எழுதியிருந்தார், ஆஞ்செலா.

வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற நான்சி, தன் கணவரிடம் நடந்ததைக் கூறினார். தனக்கு உதவி செய்த அந்த வயதான பெண்மணியைப் பற்றி நான்சி பேசப் பேச, லாரி ஓட்டுனரான கணவன் இராபர்ட், மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

"நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு, எல்லார்க்கும் பெய்யும் மழை" என்று ஔவையார் கூறிய எண்ணங்களை, மற்றொரு கோணத்தில் சிந்திக்க, அன்புச்சங்கிலி என்ற எண்ணம் உதவுகிறது.

எந்த ஒரு சங்கிலியிலும், எந்த வளையம் முக்கியமானது என்ற கேள்வி எழுவதில்லை. ஒவ்வொரு வளையமும், தன் பெயரும் புகழும் மட்டும் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படாமல், ஒன்றிணைந்து செயல்படுவதுதான், சங்கிலியின் இலக்கணம்.

அன்புச்சங்கிலியின் ஒரு வளையமாக, நயீன் நகரக் கைம்பெண், எஞ்சியிருந்த தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்திருப்பார் என்று நாம் நம்பலாம். இப்புதுமையின் இறுதி வரிகள், அந்தக் கைம்பெண் தன் வாழ்வில் என்ன செய்திருப்பார் என்று எண்ணிப்பார்க்க உதவுகின்றன. இதோ, அவ்வரிகள்:

லூக்கா 7: 15-17

இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

நிகழ்ந்த புதுமையைக் கண்டு, கூட்டம் அடைந்த அச்சமும், வியப்பும், ஒரு சில நாட்கள் நீடித்திருக்கலாம். ஆனால், அன்றுமுதல், அந்தக் கைம்பெண்ணின் வாழ்வு முழுவதும் அந்த வியப்பில் நிறைந்திருக்கவேண்டும். யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் புகழ் பரவ, அந்தக் கைம்பெண் ஒரு முக்கிய கருவியாக செயல்பட்டிருக்கவேண்டும்.

அதுமட்டுமல்ல, இயேசுவால் உயிர் பெற்று, ஒரு கொடையாக தன்னிடம் வந்துசேர்ந்த மகனையும், நன்றியுள்ள உள்ளத்துடன் வாழத் தூண்டியிருப்பார், அந்தக் கைம்பெண். அன்பு சங்கிலியின் வளையங்களாக மாறியிருந்த கைம்பெண்ணும், அவரது மகனும், அச்சங்கிலியில் இன்னும் பலரை இணைத்திருப்பர் என்பதை நம்பலாம்.

கேட்காமலேயே நம்மை வந்து சேரும் நன்மைகளைப்பற்றி பேசும்போது, ஒரு நெருடலான எண்ணமும் மனதில் தோன்றுகிறது. நாள் முழுவதும், வெயிலில் நின்று, அரசிடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, மாதங்கள் பலவாக, ஏன்... ஆண்டுகள் பலவாகக் காத்திருந்தும், ஒரு பயனும் இல்லாமல், தினம் தினம் அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டி, தட்டி கையும், மனமும் ஓய்ந்துபோகும் ஏழைகளை, குறிப்பாக, ஏழைக் கைம்பண்களை இவ்வேளையில் நினைத்துப் பார்க்கிறோம். இவர்களில் பலருக்கு, அவர்கள் இறந்தபின், உதவிகள் வந்துசேர்ந்த செய்திகளையும் கேட்டிருக்கிறோம்.

நயீன் நகர கைம்பெண்ணின் மகனுக்கு மறுவாழ்வு தந்ததன் வழியே, அந்தக் கைம்பெண்ணுக்கும் மறுவாழ்வு தந்த இயேசு, இன்றைய உலகில், கைம்பெண்களுக்கு உரிய மதிப்பை வழங்கி, அவர்களைப் பேணிக்காக்கும் மனதை நமக்குத் தரவேண்டுமென மன்றாடுவோம். மரணமடைந்தோரை உயிர்பெற்றெழச் செய்த புதுமைகள் வழியாகவும், தன் உயிர்ப்பின் வழியாகவும், சாவுக்கு இறுதி வெற்றி இல்லை என்பதை உணர்த்தும் இறைமகன் இயேசு, மரணம் இறுதி அல்ல, மரணத்தைத் தாண்டிய வாழ்வு உண்டு என்ற உண்மைகளை, நம் அனைவருக்கும் கற்றுத்தருமாறு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2020, 12:36