இயேசு அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள் - லூக்கா 7:14 இயேசு அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள் - லூக்கா 7:14 

விவிலியத்தேடல்: கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 4

நயீன் நகர கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர்ப்பித்த புதுமையை, அதிர்ச்சிதரும் ஒரு செயல்வழியே இயேசு துவக்குகிறார். இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த பாடையைத் தொட்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 4

இயேசு ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ள 35 புதுமைகளில், பெண்களை மையப்படுத்தி நிகழ்ந்துள்ள புதுமைகள் ஏழு. யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளில், முதல் புதுமையும், இறுதிப் புதுமையும், பெண்கள் விடுக்கும் விண்ணப்பத்தின் பேரில், இயேசு செய்ததாகக் கூறப்பட்டுள்ளன. கானா திருமண விருந்தில், திராட்சை இரசம் தீர்ந்ததும், அன்னை மரியா விடுத்த விண்ணப்பத்தை இயேசு நிறைவேற்றியது, முதல் புதுமை. இலாசரை உயிர்ப்பிக்கும் இறுதிப் புதுமையில், இலாசரின் இரு சகோதரிகள், இயேசுவிடம் விடுத்த விண்ணப்பம், அவரை, பெத்தானியாவுக்கு அழைத்துச் சென்றது.

இவ்விரு புதுமைகள் நீங்கலாக, மீதி ஐந்து புதுமைகள், ஒத்தமை நற்செய்திகளில் பதிவாகியுள்ளன. பேதுருவின் மாமியார் குணமாதல், இறந்துபோன யாயீரின் மகள் உயிர் பெற்றெழுதல், இரத்தப்போக்கு நோயுள்ள பெண், இயேசுவின் ஆடைகளின் விளிம்பைத் தொட்டதால் குணமடைதல், என, பெண்களை மையப்படுத்திய மூன்று புதுமைகள், மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளன. கானானிய பெண் விடுத்த விண்ணப்பத்தின் பேரில், அவரது மகளை இயேசு குணமாக்கும் புதுமை, மத்தேயு, மற்றும் மாற்கு ஆகிய இரு நற்செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ஏழாவது புதுமையாக, லூக்கா நற்செய்தியில், நயீன் நகரத்தைச் சேர்ந்த கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர்தரும் புதுமையைக் காண்கிறோம்.

இப்புதுமையை இயேசு ஆரம்பித்த விதமே, நம் கவனத்தை ஈர்க்கிறது. இயேசு ஆற்றியப் புதுமைகள், மந்திரக்கோல் கொண்டு செய்யப்பட்ட மாயவித்தைகள் அல்ல, மாறாக, அவை, மக்களுக்கு நம்பிக்கை தந்த அரும் அடையாளங்கள். குறிப்பாக, நலமளிக்கும் புதுமைகளில், இயேசு, வெறும் உடல்நலத்தை மட்டும் வழங்கவில்லை, மாறாக, நலம் பெறுவோரின் உள்ளமும், நலம் பெறும்படி அவர் உதவிசெய்தார்.

அத்துடன், தனி நபர் மட்டும் நலம்பெற்றால் போதாது, சூழ இருந்த சமுதாயமும் நலம் பெறவேண்டும் என்பதற்காக, இயேசு, அதிர்ச்சி வைத்தியங்களையும் மேற்கொண்டார் என்பதை, நற்செய்தியில் பலமுறை காண்கிறோம். எடுத்துக்காட்டாக, அவர், நலம் தரும் புதுமைகளை, ஓய்வுநாள்களில் செய்தபோது, ஒய்வுநாளைக் குறித்து மக்கள் கொண்டிருந்த தவறான எண்ணங்களையும் குணமாக்கினார். அதேவண்ணம், நயீன் நகர கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர்ப்பித்த புதுமையை, அதிர்ச்சிதரும் ஒரு செயல்வழியே அவர் துவக்குகிறார். அவர் தந்த அதிர்ச்சி வைத்தியம், இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த பாடையைத் தொட்டதில் ஆரம்பமானது.

இறந்த உடலைத் தொடுவது, ஒருவரைத் தீட்டுப்படுத்தும் என்பது, இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கப்பட்ட சட்டங்களில் ஒன்று:

எண்ணிக்கை 19:11-13

மனிதப் பிணத்தைத் தொடுபவன் எவனும் ஏழு நாள்களுக்குத் தீட்டுப்பட்டிருப்பான்.  மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அவன் தன்னைத் தண்ணீரால் தூய்மையாக்கிக் கொள்வான்; இங்ஙனம் அவன் தூய்மையாயிருப்பான்;... இறந்துபட்ட எந்த ஒரு மனிதனின் உடலைத் தொட்டபின், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாதவன் எவனோ, அவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆள் இஸ்ரயேலிடமிருந்து விலக்கப்பட வேண்டும்.

இறந்தவர் உடலைத் தொடுவதால் உருவாகும் பாதிப்புக்கள், அழுத்தந்திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளன. அதிலும் சிறப்பாக, இறைவனின் பணிக்கென குறிக்கப்பட்டுள்ள குருக்கள், இவ்விதம் தீட்டுப்படாமல் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பது, இன்னும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

லேவியர் 21: 1,10-11

ஆண்டவர் மோசேயிடம் கூறியது; "ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்; அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம்.... தலையில் திருப்பொழிவு எண்ணெய் வார்க்கப்பட்டு குருத்துவ உடை அணிந்துள்ள தலைமைக் குருவாகிய உன் சகோதரன், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டும்;... எந்தப் பிணமானாலும் அது தந்தையுடையதாயினும் தாயுடையதாயினும் அதன் அருகில் சென்று அவன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

இறைவனின் பணிக்கென தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட இயேசு, இந்த விதிமுறையை மீறுகிறார். அவரை ஒரு போதகர் என்று மக்கள் ஏற்றுக்கொண்ட சூழலில், அவர் இந்த விதிமுறையை மீறுகிறார். பலிகளைவிட, இரக்கத்தை அதிகம் விரும்பும் இறைவன், (ஓசேயா 6: 6; மத்தேயு  9:13) சட்டதிட்டங்களை விட, இரக்கத்தை அதிகம் விரும்புவார் என்பதை நன்கு உணர்ந்த இயேசு, எவ்விதத் தயக்கமும் இன்றி, இறந்த இளைஞன் வைக்கப்பட்டிருந்த பாடையைத் தொட்டார்.

இயேசு அவ்வாறு செய்தது, அவரது சீடர்களையும் சேர்த்து, சூழ இருந்தோர் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கவேண்டும். ஆயினும், அந்தத் தொடுதலைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்த புதுமை, அந்த அதிர்ச்சியை, ஆனந்தமாக மாற்றியது. இந்நிகழ்வை, நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் விவரித்துள்ளார்:

லூக்கா 7:14-17

இயேசு அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இறந்தோரைத் தொடுவது, ஒருவரைத் தீட்டுப்படுத்தும் என்ற சட்டத்தை, தங்கள் வசதிக்காக, இன்னும் கடினமாக, மனிதத்தன்மையற்றதாக மாற்றிக்கொண்ட குருக்களையும், லேவியர்களையும், 'நல்ல சமாரியர் உவமை'யில், இயேசு சுட்டிக்காட்டினார். இந்த உவமையில், கள்வர் கையில் அகப்பட்டு, அடிபட்டவர், குற்றுயிராய் கிடந்தார் என்பதை, இயேசு, தெளிவாகக் கூறியுள்ளார். (லூக்கா 10:30)

மோசே தந்த சட்டங்களும், அதன் விளக்கங்களும் 'Mitzvot' என்ற தொகுப்பாக, யூதர்களால் பின்பற்றப்பட்டன. Mitzvot கட்டளைகளின்படி, ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு உதவுவது, மிக மிக முக்கியம் என்றும், அதேபோல், கேட்பாரற்று, அனாதையாகக் கிடக்கும் ஓர் உடலை அடக்கம் செய்வது, யூதர்களின் Mitzvot கட்டளைகளின் ஒரு பகுதி என்றும், Klyne Snodgrass என்ற விவிலிய ஆய்வாளர் கூறியுள்ளார்.

இறைவன் மோசே வழியாகத் தந்த சட்டங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் மறுத்து, தங்களுக்குத் தேவையானவற்றை, அல்லது, சாதகமானவற்றை மட்டும் பின்பற்றி வாழ்ந்த மதத்தலைவர்களை மனதில் வைத்து, இயேசு, 'நல்ல சமாரியர் உவமை'யைக் கூறினார். இவ்வுவமையில், குருவையும், லேவியரையும், எதிர்மறையான கோணத்தில் சித்திரித்த இயேசு, அடிபட்டவரைத் தொட்டு, தூக்கி, பராமரித்த நல்ல சமாரியரை, வெகு சிறந்த கோணத்தில், நமக்குமுன் படைக்கிறார். அது மட்டுமல்ல, அந்த உவமையின் இறுதியில், தன்னிடம் கேள்விகளைத் தொடுத்த திருச்சட்ட அறிஞரிடம், "நீரும் போய் அப்படியே செய்யும்" (லூக்கா 10:37) என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார் இயேசு. நல்ல சமாரியரைப்போலவே நாம் அனைவரும் செயல்படவேண்டும் என்பதை, இவ்வுவமையின் முக்கியப் பாடமாக வழங்குகிறார்.

நோயுற்றோரைத் தொடுவது, ஒருவரைத் தீட்டுப்படுத்தும் என்று எழுதப்பட்டிருந்த சட்டங்களை இயேசு மீறினார் என்பதை, நற்செய்தியில் பலமுறை காண்கிறோம். ஒரு வார்த்தை சொன்னாலும் போதும், ஊழியர் நலம் பெறுவார் என்று, நூற்றுவர் தலைவர் சொன்ன நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து, இயேசு, நூற்றுவர் தலைவரின் இல்லத்திற்குப் போகாமலேயே, தன் வார்த்தையின் வல்லமையால் அந்த ஊழியருக்கு குணமளித்தார். அதைத் தொடர்ந்து, நயீன் ஊருக்குள் நுழைந்த இயேசு, அங்கும், தன் வார்த்தையின் வல்லமைகொண்டு, இறந்தவரை, உயிர்பெற்றெழச் செய்திருக்கலாம். இருப்பினும், அவர், இம்முறை, தன் வார்த்தைகளாலும், தொடுதலாலும் கைம்பெண்ணின் மகனை உயிர்பெற்றெழச் செய்கிறார்.

இப்புதுமையின் பல்வேறு நுணுக்கமான கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் மறைக்கல்வி உரையில் வழங்கினார் என்பதை, சென்ற இரு விவிலியத் தேடல்களில் சிந்தித்தோம். இப்புதுமையின் உச்சக்கட்டமாக, உயிர்பெற்ற இளைஞனை தாயிடம் இயேசு ஒப்படைத்த நிகழ்வையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழகியக் கருத்துக்களை முன்வைத்தார்:

"இயேசுவின் உயிர்தரும் வார்த்தைகளைக் கேட்ட 'இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்' (லூக்கா 7:15). இச்சொற்களில், இயேசுவின் பரிவு முழுமையாக வெளிப்படுகிறது. தாய், தன் மகனை, மீண்டும் பெறுகிறார். இயேசுவின் கரங்களிலிருந்து தன் மகனைப் பெற்றதால், அந்தத் தாய் இரண்டாம் முறை தாயாகிறார். ஆனால், இம்முறை அந்த மகனின் உயிர், தாயிடமிருந்து வரவில்லை, இறைவனிடமிருந்து வந்தது!"

கோவிட் 19 கொள்ளைநோயின் தாக்கத்தால், உயிர்களையும், உறவுகளையும் இழந்தது போதாதென்று, வாழ்வின் அடித்தளமான நம்பிக்கையையும் இழந்து, மக்கள், குறிப்பாக, வறியோர், நடைப்பிணங்களாக வலம் வருவதை நாம் அறிவோம். இவ்வேளையில், இறைவன், இந்த நடைப்பிணங்களின் ஊர்வலத்தை நிறுத்தி, அவர்களுக்கு மீண்டும் உயிரளிக்கும் நம்பிக்கையை வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இந்த நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம், பல்வேறு தனிமனிதர்களும், மதம் சார்ந்த, அல்லது, மதம் சாராத பிறரன்பு அமைப்புக்களும், பணியாற்றிவருவதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இவ்வுலகம் ஏங்கிக் காத்திருக்கும் இரக்கச் செயல்கள், எவ்வித அழைப்பும் இன்றி, எதிர்பார்ப்பும் இன்றி நிகழும்போது, அவை, இவ்வுலகை இன்னும் அதிகமாக உயிர் பெறச் செய்கின்றன.

நயீன் நகரப் புதுமையை எவ்வித அழைப்போ, வேண்டுதலோ இன்றி, இயேசு, தானாகவே முன்வந்து செய்தார் என்பதைக் காணும்போது, நம் வாழ்வில் தானாகவே நிகழும் புதுமைகளை எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறோம். நாம் அழையாத வேளையிலும், நம் வாழ்வில் இறைவன் குறுக்கிட்டு நிகழ்த்திய அற்புதங்களை அசைபோட, அடுத்தத் தேடலில் முயல்வோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2020, 12:19